நீங்க தமிழக முதல்வரா இல்ல சேலம் யூனியன் பிரதேச முதல்வரா..? எகிறும் கொரோனா விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

By Asianet TamilFirst Published Jun 21, 2020, 8:26 PM IST
Highlights

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், அதனை அவரே மறுத்துவிட்டதாகவும், ஸ்டாலின்தான் அப்படிச் சொல்வதாகவும் முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். அமைச்சருக்கு நோய்த்தொற்று இல்லை என்றால் அது மகிழ்ச்சிக்குரியதுதான். மருத்துவமனையில் அமைச்சர் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்த மறுநாள் அவரை நான் தொடர்பு கொண்டு பேசினேன். அவரிடம் செய்தியை உறுதிப்படுத்திய பிறகு அவர் நலமடைய வேண்டி ‘ட்விட்டர்’செய்தி வெளியிட்டேன். அமைச்சருக்கே கொரோனா என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும், வழக்கம் போல் முதல்வர் மறைக்க முயற்சிக்கிறார். 

எடப்பாடி பழனிசாமி இன்னமும் ‘சேலம் யூனியன் பிரதேச முதலமைச்சரைப்’போலத்தான் நடந்து கொள்கிறாரே தவிர, தமிழக முதலமைச்சராக எப்போது தன்னை நினைக்கப் போகிறார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி, அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, தமிழ்நாட்டில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதுவரை 88 நாட்கள், ஊரடங்கு - ஊரடங்கிற்குள் ஊரடங்கு - படிப்படியாகத் தளர்வுகள் - தீவிரமான முழு ஊரடங்கு என்று நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன; ஆனால் நோய்த் தொற்று மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. 
இப்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஜூன் 30-ம் தேதியுடன் இந்த ஊரடங்குக் காலம் முடிவடையும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்குள் கொரோனா நோய்த் தொற்று முடிந்துவிடுமா என்று பார்த்தால் அதற்கான சிறிய அறிகுறிகூடத் தென்படவில்லை. நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. 1000 -1500 -2000 என்று மிக மோசமான எண்ணிக்கையில் கூடிக்கொண்டே போகிறது.


நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்குதான் ஒரே வழி என்று சொன்னது மாநில அரசு. ஆனால் ஐந்து கட்டமாக ஊரடங்கு அமலில் இருந்த பிறகும், நோய்ப் பரவல் அதிகமாகிக் கொண்டே போகிறது என்றால், இவர்கள் அமல்படுத்தியது பெயரளவுக்கான ஊரடங்கு என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. இப்போது கொரோனா இல்லாத மாவட்டங்களிலும் சேர்ந்து பரவியிருக்கிறதே தவிர, குறையவில்லை. தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆயிரத்து 845. இறந்தவர்கள் எண்ணிக்கை 704 ஆகிவிட்டது. தினமும் 2000 பேருக்கு மேல் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். தினமும் சுமார் 50 பேர் இறக்கிறார்கள். நேர்ந்துவரும் இந்தப் பேரழிவைத் தமிழக அரசோ, தமிழக முதல்வரோ எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்று தெரியவில்லை. இன்னமும், கொரோனாவை கட்டுக்குள் வைத்துள்ளோம் என்று அறிவிப்புக்கு மேல் அறிவிப்பு செய்து கொண்டு இருக்கிறார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி.
இந்த அறிவிப்புகளின் உண்மைத் தன்மையினை தமிழக மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். கொரோனாவை முழுமையாக எப்போது கட்டுப்படுத்த முடியும் என்ற கேள்விக்கு, 'இறைவனுக்குத்தான் தெரியும், நாம் என்ன டாக்டரா?' என்று ஊடகவியலாளர்களை நோக்கிக் கேட்டுள்ளார், எதிர்க்கட்சியினர் எல்லாம் என்ன டாக்டர்களா என்று வினோதமான வினாத்தொடுத்த முதலமைச்சர், எல்லாவற்றுக்கும் அரசாங்கம், அரசாங்கம் என்று சொல்லக் கூடாது, அரசாங்கம் என்று தனியாக எதுவும் கிடையாது, மக்கள்தான் அரசாங்கம் என்றும் முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.
அதாவது, தனது அரசாங்கத்தால் செய்வதற்கு எதுவுமில்லை; செய்யத் தெரியவில்லை; செய்ய இயலவில்லை என்ற தனது இயலாமைக்கு, வேறுவேறு வார்த்தைகளின் மூலமாக முதலமைச்சர் மறைமுக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 'மூன்றே நாளில் கொரோனா ஒழிந்துவிடும்' என்று இவர்தான் இறைவனைப் போலப் பேட்டி கொடுத்தார். 'இது பணக்கார வியாதி; வயதானவர்களுக்குத்தான் வரும்' என்று மருத்துவ நிபுணரைப் போலச் சொன்னார். ‘யாரும் பயப்படத் தேவையில்லை’என்று போலி ஆறுதல் சொன்னார். ஐந்து கட்ட ஊரடங்குக்குப் பிறகும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் கைபிசைந்து நிற்கிறார்.
அரசாங்கத்தை நான் குற்றம் சொல்வதாக முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். குளறுபடிக்கு மேல் குளறுபடி, குழப்பத்திற்கு மேல் குழப்பம், குற்றத்துக்கு மேல் குற்றம் அரசாங்கம் செய்வதால்தான், நான் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுகிறேன். கொரோனாவைத் தடுத்திருக்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்குத் தானே உண்டு!கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானவரைக் கூட விட்டது யார் குற்றம்? கோயம்பேடு காய்கறி அங்காடியில் லட்சக்கணக்கானவர்களைக் கூட விட்டது யார் குற்றம்? ஊரடங்குக் காலத்தில் மதுக்கடைகளைத் திறந்து விட்டு ஒருவர் தோளில் இன்னொருவரை ஏறி நிற்க விட்டது யார் குற்றம்? மீன் மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான மக்களைக் கூட விட்டது யார் குற்றம்?
கொரோனாவால் மறைந்தவர்களின் எண்ணிக்கையை மறைத்தது யார் குற்றம்? பரிசோதனைகளின் எண்ணிக்கையை மறைத்தது யார் குற்றம்? இவை அனைத்தும் பொதுமக்களின் குற்றமா? அல்லது இந்த நாட்டை ஆள்வதாகச் சொல்லிக் கொள்ளும் பழனிசாமியின் குற்றமா? சமூகப் பரவல் இல்லை என்று அரசு சொல்லி வருகிறது. சமூகப் பரவலாக ஆகிவிடக் கூடாது; ஆனால், சென்னையில் பாதிக்கப்பட்ட சுமார் 1500 பேருக்கு யாரால் தொற்று ஏற்பட்டது என்பதைக் கண்டறிய முடியவில்லை என்கிறார்கள். இதுதானே சமூகப் பரவலுக்கான முதல் அறிகுறி. இதனை அரசு கவனித்ததா?


வெளிமாவட்டங்களில் தொற்று குறைவு என்றும் சொல்லி இருக்கிறார் முதலமைச்சர். பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்திருப்பதாக இன்றைய தினம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. நேற்றைய தினம் ஒரே நாளில் 2396 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது என்றால், அதில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1254 பேர்தான். மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 1142 பேர் என்கிறது அரசின் அறிவிப்பு. பிறகு எப்படிப் பிற மாவட்டங்களில் தொற்று குறைவு என்று சொல்ல முடியும்?சென்னையில் மட்டுமே அதிகமாக இருந்த பரவல், இப்போது பிற மாவட்டங்களிலும் அதிகமாகி வருவதை இது காட்டவில்லையா?
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், அதனை அவரே மறுத்துவிட்டதாகவும், ஸ்டாலின்தான் அப்படிச் சொல்வதாகவும் முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். அமைச்சருக்கு நோய்த்தொற்று இல்லை என்றால் அது மகிழ்ச்சிக்குரியதுதான். மருத்துவமனையில் அமைச்சர் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்த மறுநாள் அவரை நான் தொடர்பு கொண்டு பேசினேன். அவரிடம் செய்தியை உறுதிப்படுத்திய பிறகு அவர் நலமடைய வேண்டி ‘ட்விட்டர்’செய்தி வெளியிட்டேன். அமைச்சருக்கே கொரோனா என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும், வழக்கம் போல் முதல்வர் மறைக்க முயற்சிக்கிறார். ஆனால் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கும் அமைச்சர் அன்பழகனுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது என்று ‘ட்விட்’ செய்திருந்தாரே அதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்?
எவ்வளவு பரிசோதனைகள் செய்துள்ளீர்கள் என்பதை மாவட்ட வாரியாகக் கொடுங்கள் என்று தொடக்கத்திலிருந்து சொல்லி வருகிறேன். ஒரே ஒருநாள் மட்டும் அப்படிக் கொடுத்தார்கள். பிறகு நிறுத்திவிட்டார்கள். நேற்றைய தினம் மாவட்ட வாரியாக எண்ணிக்கையைக் கொடுத்துள்ளார்கள். நோய்த் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களை விட்டுவிட்டு நோய்த் தொற்று குறைவாக உள்ள சேலம் மாவட்டத்தில் அதிகமான சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 3620 பேர் பாதிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 20,050 சோதனைகளும், 1095 பேர் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12,983 சோதனைகளும், 2414 பேர் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் 13,981 சோதனைகளும் செய்யப்பட்டுள்ளன. 323 பேர் பாதிக்கப்பட்ட சேலம் மாவட்டத்தில் மட்டும் 31,019 பேருக்குச் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் மட்டும் ஏன் இவ்வளவு சோதனைகள் என்று நான் கேட்கவில்லை. அதிகம் பேர் பாதிக்கப்பட்ட மாவட்டத்துக்கு ஏன் அதிக சோதனைகள் நடத்தப்படவில்லை என்று கேட்கிறேன்.
சேலம் பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு மட்டும் பாதுகாப்பு உடைகள் வழங்கியதைப் போல, சேலத்துக்கு மட்டும் பரிசோதனை செய்தால் போதுமா? எடப்பாடி பழனிசாமி இன்னமும் ‘சேலம் யூனியன் பிரதேச முதலமைச்சரைப்’போலத்தான் நடந்து கொள்கிறாரே தவிர, தமிழக முதலமைச்சராக எப்போது தன்னை நினைக்கப் போகிறார்? அரசின் நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். கொரோனா காலத்தில் மதுக்கடைகளைத் திறப்பதையும், 9 லட்சம் மாணவ மாணவியரையும் 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களையும் வீட்டை விட்டு வெளியே வரவைத்துப் பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்த வேண்டுமா என்பதையும்தான் கேட்டோமே தவிர; மற்றபடி அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு நாங்கள் ஒத்துழைப்புத் தந்தே வருகிறோம்.


அரசாங்கத்தின் எந்த நடவடிக்கையையும் நாங்கள் தடுக்கவில்லை. அரசின் நடவடிக்கைகள் போதுமானவை அல்ல, இன்னும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாக வேண்டும். அதற்கான ஆலோசனைகளைத்தான் சொல்லி வருகிறேன். இந்த ஆலோசனைகள் நாட்டு நலன் கருதி, தமிழ் மக்கள் நலன் கருதிச் சொல்லப்படுபவை. இந்த ஆலோசனைகளைக் கூட அரசியல் உள்நோக்கத்தோடு முதலமைச்சர் பார்க்கிறார். இதனை அவர் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று அறிக்கையில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!