வெட்டிப் பேச்சு, வீண் உளறல் வேண்டாம்... ‘டாமின்’ விவகாரத்தில் சி.வி. சண்முகத்தை சீண்டிய ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published Feb 12, 2020, 10:02 PM IST
Highlights

ஆகவே, ‘வெட்டிப் பேச்சுகள்’ ‘வீண் உளறல்களை’ தவிர்த்து விட்டு, டாமின் குவாரிகளை இயக்குவதற்குத் தேவையான சுற்றுச்சூழல் அனுமதிகளை உடனடியாகப் பெற்று, இன்னும் சொல்லப்போனால் மத்திய பாஜக அரசுக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு இருக்கும் அதிமுக அரசு - பொதுத் துறை நிறுவனங்களை காப்பாற்றவாவது முன்வர வேண்டும் என்றும் பொதுத்துறை நிறுவனமான ‘டாமின்’ நிலங்களை விற்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என்று  அறிக்கையில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியின் ஊழலிலும் நிர்வாகச் சீர்கேடுகளிலும் சிக்கி ஏற்கனவே  ‘டான்செம்’ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் சிதைந்து கொண்டிருக்கிற வேளையில், இப்போது டாமின் நிறுவனமும் நிதி நெருக்கடியில் முடங்கிப் போயிருக்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: 


“தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தமிழ் நாடு கனிம நிறுவனம் (TAMIN) அதன் ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிமுக ஆட்சியின் ஊழலிலும் நிர்வாகச் சீர்கேடுகளிலும் சிக்கி ஏற்கனவே  ‘டான்செம்’ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் சிதைந்து கொண்டிருக்கிற வேளையில், இப்போது டாமின் நிறுவனமும் நிதி நெருக்கடியில் முடங்கிப் போயிருக்கிறது.
தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அலுவலகத்தில் வாடகைக்கு இருக்கும் டாமின் தலைமை அலுவலகம், அந்த வாரியத்துக்கு வாடகையைக்கூட முறையாகச் செலுத்த முடியவில்லை. ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஒழுங்காக சம்பளம் கொடுக்க முடியவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி இல்லாததால் 60 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டு, டாமின் நிறுவனத்தின் கீழ் உள்ள குவாரிகளை இயக்க முடியவில்லை. இதனால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, அதனுடைய வரலாறு காணாத கடும் நெருக்கடிக்கு “டாமின்” நிறுவனம் உள்ளாகி நிலைகுலைந்து போயிருக்கிறது.


‘605 சதவீத லாபத்தில் டாமின் நிறுவனம் இயங்குவதாக’ இந்த நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருந்த வள்ளலார் ஐ.ஏ.எஸ் இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வாரப்பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தார். ஆனால், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் நிர்வாகத்தில் இன்றைக்கு டாமின் நிறுவனம் தன் ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாத அவல நிலைமைக்கு உள்ளாகியிருக்கிறது. வட சென்னைப் பகுதியில் உள்ள டாமினுக்குச் சொந்தமான நிலத்தை விற்று இனிமேல் சம்பளம் கொடுக்கலாமா என்று அமைச்சர் ஆலோசித்து வருவதாக வரும் செய்திகள் அதைவிட கொடுமை.


ஆகவே, ‘வெட்டிப் பேச்சுகள்’ ‘வீண் உளறல்களை’ தவிர்த்து விட்டு, டாமின் குவாரிகளை இயக்குவதற்குத் தேவையான சுற்றுச்சூழல் அனுமதிகளை உடனடியாகப் பெற்று, இன்னும் சொல்லப்போனால் மத்திய பாஜக அரசுக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு இருக்கும் அதிமுக அரசு - பொதுத் துறை நிறுவனங்களை காப்பாற்றவாவது முன்வர வேண்டும் என்றும் பொதுத்துறை நிறுவனமான ‘டாமின்’ நிலங்களை விற்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என்று  அறிக்கையில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!