குறிப்புகள் இல்லாமல் அசெம்பிளியில் வெளுத்துக் கட்டிய சண்முகம் !! பாராட்டித் தள்ளிய திமுக உறுப்பினர்கள் !!

By Selvanayagam PFirst Published Jul 9, 2019, 8:29 PM IST
Highlights

தமிழக சட்டப் பேரவையில் இன்று அமைச்சர் சி.வி.சண்முகம், எந்தவித குறிப்புகளும் இல்லாமல் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலுரை வழங்கியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. பதிலுரையைத் தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அவரைப் பாராட்டினர்.
 

தமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டம், நீதி நிர்வாகம் மற்றும் சிறைத்துறைகளின் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்களின் விவாதத்துக்கு பின் பிற்பகல் சுமார் 1.50 மணிக்கு பதிலுரை வழங்கத் தொடங்கிய அமைச்சர் சண்முகம், 2.25 மணிக்கு தன்னுடைய உரையை முடித்தார்.

வழக்கமாக அமைச்சர்கள் பதிலுரை வழங்கும்போது, தங்களுடைய துறை சார்ந்த முக்கிய குறிப்புகளை கையில் வைத்துக்கொண்டு, அதை பார்த்து படிப்பார்கள். சில அமைச்சர்கள் முழு பதிலுரையையும் பார்த்தே படிப்பார்கள்.

ஆனால் அமைச்சர் சண்முகம், கையில் ஏதும் குறிப்பில்லாமல் சட்டத்துறை, நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள் உள்ளிட்ட துறைகளில் அரசு இதுவரை என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றியுள்ளது, செயல்படுத்தவுள்ளது என்பது குறித்த தகவல்களை புள்ளி விவரத்தோடு பேசியதை பேரவையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் ரசித்து பார்த்தார்கள்.

அமைச்சர் பேசி முடித்ததும், திமுக உறுப்பினர்கள் சிலர் அமைச்சரை அழைத்து வாழ்த்து தெரிவித்தனர். அதே போல் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களும் பாராட்டினர்.

click me!