திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கட்சி தலைமையின் திடீர் உத்தரவின் பேரில் சென்னை விரைகின்றனர்.
திமுக எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் சென்னை வருமாறு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதால், அனைவரும் சென்னை விரைவதாக தகவல் கிடைத்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 10 நாட்களாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 27 மற்றும் 28ம் தேதிகளில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை தேறியது. எனினும் மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் இருப்பதற்காக மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த சில நாட்களாக கருணாநிதியின் உடல்நிலை சீராக இருந்த நிலையில், நேற்று மீண்டும் மோசமடைந்தது. இதையடுத்து நேற்று மாலை 6.30 மணிக்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், வயதுமூப்பின் காரணமாக முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது எனவும் மருத்துவ உதவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து கருணாநிதி கண்காணிக்கப்படுவார் எனவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைப் பொறுத்தே கணிக்க முடியும் எனவும் காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் தொண்டர்கள் பதற்றமடைந்தனர். ஏராளமான தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் நேற்றிரவு குவிந்தனர். போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இரவு பகல் பாராமல் காவேரி மருத்துவமனையில் காத்துக்கிடக்கும் தொண்டர்கள், அடுத்த மருத்துவ அறிக்கை எப்போது வரும் என்று எதிர்நோக்கியுள்ளனர்.
ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினர் காவேரி மருத்துவமனையில் உள்ளனர். இன்று காலை முதல் திமுக நிர்வாகிகளின் வருகையும் அதிகமாகி உள்ளது. துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனையில் உள்ளனர். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனும் மருத்துவமனைக்கு வந்தார்.
இந்நிலையில், நம்மிடம் பேசிய திமுக மாவட்ட செயலாளர் ஒருவர், கட்சி தலைமையின் உத்தரவின் பேரில் சென்னை விரைவதாக தெரிவித்தார். மேலும் திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் சென்னை வருமாறு கட்சி தலைமை திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். அதனால் திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் சென்னை விரைகின்றனர்.
திமுக எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சென்னை விரைவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.