பூங்கோதை ஆலடி அருணா தற்கொலைக்கு முயற்சித்தாரா? ஒரே அறிக்கையின் மூலம் அனைத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி..!

By vinoth kumarFirst Published Nov 21, 2020, 9:54 AM IST
Highlights

தான் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்றும், தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் ஆலங்குளம் எம்.எல்.ஏ.வுமான பூங்கோதை ஆலடி அருணா கேட்டுக்கொண்டுள்ளார்.

தான் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்றும், தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் ஆலங்குளம் எம்.எல்.ஏ.வுமான பூங்கோதை ஆலடி அருணா கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- “ 19.11.2020 காலை ஆலங்குளத்தில் காலை 6 மணியளவில் உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி விழுந்து - என்னுடைய பணியாளர்கள் உடனடியாக சீபா மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். இரத்த பரிசோதனையில் என் உடலில் இரத்தம் உறையும் தன்மை குறைவாகவும், சர்க்கரை அளவு குறைவாகவும் இருந்தது கண்டறியப்பட்டு - மூளை, நெஞ்சு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டு தக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

நடந்த இந்த உண்மைச் சம்பவத்தை மறைத்து தவறாக திரித்து நான் ஏதோ தற்கொலை முயற்சி செய்துகொண்டது போல் ஊடகங்கள் பொய்யுரை பரப்புவது மிகுந்த வேதனை அளிக்கிறது. 15 ஆண்டுகள் அரசியலில் - முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்கள் என்னை அமைச்சராக நியமித்து அழகு பார்த்தார். அப்போது எவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் என்னை தன் மகளைப் போல் பாசத்துடன் நடத்தினாரோ, அதேபோல கழகத் தலைவர் அண்ணனும் என் மீது பாசமாக இருக்கிறார். எனக்குச் சட்டமன்ற உறுப்பினராக, மாநில மருத்துவ அணி தலைவராக பணியாற்ற வாய்ப்பளித்து என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இத்தகைய சூழலில் கழகத்திற்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களை கேட்டுக் கொள்கிறேன்.

தற்போது நான் சென்னை அப்போலோ மருத்துவமனையில் எனக்கு ஏற்பட்ட திடீர் மயக்கத்திற்கான மருத்துவ காரணங்களை அறிய அனுமதிக்கப்பட்டு - சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு மட்டுமல்ல, என் தந்தைக்கும் எனக்கும் முகவரியும் முன்னேற்றமும் தந்தது இந்த மாபெரும் ஜனநாயக இயக்கமான தி.மு.க. ஆகவே எனக்கு மருத்துவ ரீதியாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு குறித்து தயவுகூர்ந்து இத்தகைய தவறான வதந்திகளைப் பரப்பி - என்னை வளர்த்துள்ள கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்திட வேண்டாம் என்றும் - என் உடல்நிலை குறித்து விசாரிக்காமல் பத்திரிகைகள், ஊடகங்கள் கற்பனைச் செய்திகளை வெளியிட வேண்டாம் எனப் பணிவுடன் கேட்டு கொள்கின்றேன் என்று பூங்கோதை தெரிவித்துள்ளார். இதனையடுத்து அனைத்து சர்ச்சைகளுக்கு இந்த ஒரே அறிக்கையில் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

click me!