திறக்கப்பட்ட தி.மு.க. கஜானா! கொட்டிய பரிசு மழை! வயிற்றெரிச்சலில் மாவட்ட கரைவேட்டிகள்..

By Ganesh RamachandranFirst Published Jan 19, 2022, 6:11 PM IST
Highlights

தலைநகரில் தி.மு.க.வினர் இப்படி குளிக்க வைக்கப்படுவது தமிழகம் முழுவதும் பரவ, மற்ற மாவட்ட அமைச்சரக்ள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்களை அன்பளிப்பு கேட்டு நச்சரித்துக் கொண்டு இருக்கிறார்களாம்

பல வகைகளில் பார்த்தாலும் தமிழக முதல்வர் செய்ததை சரி! என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது, சமீபத்தில் கடந்த தை பொங்கல் திருவிழாவுக்கு பணம் ஏதும் கொடுக்காமல், 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பை மட்டும் வழங்கியது ஸ்டாலின் தலைமையிலான அரசு. இது ஒரு சாராருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. காரணம், கடந்த சில ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு தைப்பொங்கலுக்கு பரிசு தொகுப்புடன், பணமும் கொடுத்து பழக்கப்படுத்தி விட்டது. ஆனால் இந்த முறை தி.மு.க.வின் அரசு பணம் இல்லை! என்றதோடு, பல இடங்களில் பொருட்களின் தரம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

ஆனால் தி.மு.க. செய்தது சரியே. பணத்தை கொடுத்து மக்களை சோம்பேறிகளாக்குவதை விட, அதை சம்பாதிக்கும் வாப்புகளை உருவாக்கி கொடுப்பதுதானே நல்ல அரசாங்கம்! அதைத்தான் செய்கிறது ஸ்டாலினின் அரசு! என்று பாராட்டுகளும் மறுபுறம் குவிகின்றன.

இது இப்படி இருந்தாலும் கூட, ’மக்களுக்கு கொடுக்கதான் தி.மு.க. அரசிடம் பணம் இல்லை. ஆனால் கட்சி நிர்வாகிகளுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது பணத்தை’ என்று அதிர்வேட்டு வைக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இதுபற்றி விளக்கம் கேட்டால்….”பொங்கலுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியை சேர்ந்த தன் கட்சி நிர்வாகிகளை வீட்டுக்கே அழைத்து, அவர்களின் பதவி தரத்துக்கு ஏற்ப பரிசுத்தொகையாக ஆயிரங்களை அள்ளி கொடுத்துள்ளார். தான் வழங்கியது மட்டுமில்லாமல், தலைநகர தி.மு.க. தலைவர்கள் அனைவரும் அப்படி கவனிப்பை நடத்த அறிவாலயத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு பறந்தது. விளைவு அமைச்சர் சேகர்பாபு தனது தொகுதி நிர்வாகிகளுக்கு பரிசுமழையை அள்ளிக் கொடுத்து குளிர வைத்தாராம்.

முதல்வரின் மகனும், இளைஞரணி மாநில செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினும் தன்  சேப்பாக்கம் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஆயிரமாயிரமாய் அள்ளிக் கொடுத்தும், அது போக பரிசுப்பொருட்களை கொடுத்தும் செமத்தியாக கவனித்தாராம். ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வான எபிநேசரோ பணமுடிப்போடு, முன்னணி பிராண்ட் வாட்ச்சை பரிசாக தந்துள்ளார்.

தலைநகரில் தி.மு.க.வினர் இப்படி குளிக்க வைக்கப்படுவது தமிழகம் முழுவதும் பரவ, மற்ற மாவட்ட அமைச்சரக்ள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்களை அன்பளிப்பு கேட்டு நச்சரித்துக் கொண்டு இருக்கிறார்களாம் அந்தந்த ஏரியா கட்சி நிர்வாகிகள். பல இடங்களில் அமைச்சர்களோ ‘பொங்கலே முடிஞ்சிடுச்சு இப்ப எதுக்குய்யா அன்பளிப்பு?’ என்று கேட்க, ‘போன மாசம் பார்த்த வேலைக்கு இந்த மாசம் சம்பளம் வாங்குறதில்லையா? அது மாதிரிதான் இதுவும். பொங்கல் முடிஞ்சாலும் பரவாயில்ல, பணத்த கொடுங்க.’ என்று லாஜிக்காக முட்டுகிறார்களாம்.

இதை அரசியல் விமர்சகர்களோ ’மக்களுக்கு கொடுக்க அரசு கஜானாவில் பணமில்லை. ஆனால் நிர்வாகிகளை குளிரவைக்க கட்சி கஜானாவில் பணமிருக்குது. ஹும், தேர்தல் நெருங்குதுல்ல. இப்படித்தான் நடக்கும்.’ என்று கலாய்க்கின்றனர்.

ஆனாலும் அது உண்மைதானே!

click me!