உதயநிதி அமைச்சர் ஆக வேண்டும்.. எங்களுடைய எண்ணம் இதுதான்.. அமைச்சர் சு.முத்துசாமி

By Raghupati RFirst Published Dec 20, 2021, 1:11 PM IST
Highlights

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் என்ற பெயரில் கோரிக்கை மனு வழங்கும் நிகழ்ச்சி பரிமளம் அரங்கில் நேற்று நடந்தது. 

நிகழ்ச்சிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்றார். அப்போது பேசிய ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ, ‘ முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கும் அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோட்டின் அடையாளமாக கருதப்படுபவர். ஈரோடு மாவட்டத்துக்கான பல கோரிக்கைகளை கொடுத்து இருக்கிறோம். இதில் முக்கிய கோரிக்கையாக நாங்கள் வைப்பது ஈரோடு மாவட்டத்தை 2 ஆக பிரித்து கோபியை தலைமையாக கொண்டு கோபி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பதாகும்.

இப்போது எங்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கூடியவராக அமைச்சர் சு.முத்துசாமி உள்ளார். உங்களால் முடியவில்லை என்றால் வேறு யாராலும் முடியாது. இதுபோல் ஈரோட்டில் தொழில் பாதிப்பு ஏற்படாமல் கழிவு நீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க மத்திய அரசு நிதி தர தயாராக இருக்கிறது. அதை பெற முயற்சிக்க வேண்டும். கவுந்தப்பாடி நாட்டுச்சர்க்கரைக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும்.

பிறகு பேசிய அமைச்சர் சு.முத்துசாமி, ‘இங்கு கொடுக்கப்பட்ட கோரிக்கைகளில் பெரும்பாலானவை ஏற்கனவே எங்களது செயல் திட்டத்தில் உள்ளவைகள் ஆகும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 505 திட்டங்கள் கூறப்பட்டது. அதில் 300 திட்டங்களுக்கு மேல் நிறைவேற்றுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. மேலும் கூடுதல் திட்டங்கள் சேர்க்கப்பட்டு முதல்-அமைச்சரின் தொலைநோக்கு திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ளது. 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு அளித்து இருக்கும் கட்டளைகளில் ஒன்று எதிர்க்கட்சியினரின் மனம் நோகும்படி பேசக்கூடாது என்பதாகும். செய்து முடித்த திட்டங்கள் பற்றி பேச வேண்டாம். இனி என்ன செய்யப்போகிறோம் என்பதை சிந்தித்து நிறைவேற்றுங்கள் என்று கூறுவார். ஈரோடு மாவட்டத்தை பிரித்து கோபி மாவட்டம் உருவாக்குவது தொடர்பாக கேட்டு இருக்கிறீர்கள். அப்படி ஒரு பிரிவு வந்தால் சகோதரர்களுக்குள் ஏற்படும் பாகப்பிரிவினை போன்றுதான் அது இருக்கும்.

8 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்பது 4 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டமாக மாறினால் இன்னும் வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஆனால், மாவட்டம் பிரிக்க பல்வேறு நடைமுறைகள் உள்ளன. அதுபற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவு எடுப்பார்கள். இந்த கோரிக்கை முதல்-அமைச்சரிடம் எடுத்துச்செல்லப்படும். குறிப்பாக நமது ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்யும் வகையில் சூரிய சக்தியால் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும்.

இங்கே கொடுக்கப்பட்டு உள்ள 141 கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். அதற்கு நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். வரும் உள்ளாட்சி தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும். உள்ளாட்சி கவுன்சிலரால் ஒரு எம்.எல்.ஏ. செய்ய முடியாத பணியை செய்ய முடியும். எனவே ஆளும் கட்சியாக நாம் இருக்கிறபோது, நமது கட்சியை சேர்ந்தவர்கள் கவுன்சிலராக வந்தால் அனைத்து தேவைகளையும் 100 சதவீதம் நிறைவேற்ற முடியும். எனவே இதை கருத்தில் கொண்டு உள்ளாட்சி தேர்தலை சந்தித்து வெற்றி ஈட்ட வேண்டும். உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆக வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம்’ என்று கூறினார்.

click me!