காவேரியில் குவிந்த கழக நிர்வாகிகள்!! ஸ்டாலின் அவசர ஆலோசனை

By karthikeyan VFirst Published Aug 7, 2018, 2:32 PM IST
Highlights

திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தலைமை கழக நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். 

திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தலைமை கழக நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். 

திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் 11வது நாளாக இன்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி காலை 1.30 மணியளவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் விளைவாக, ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு ஆகியவை சீரடைந்தது. சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்தது. எனினும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டிருந்தார் கருணாநிதி.

இந்நிலையில், நேற்று மாலை 6.30 மணியளவில் காவேரி மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், வயதுமூப்பின் காரணமாக முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது எனவும் மருத்துவ உதவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து கருணாநிதி கண்காணிக்கப்படுவார் எனவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைப் பொறுத்தே கணிக்க முடியும் எனவும் காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனால் தொண்டர்கள் பதற்றமடைந்தனர். ஏராளமான தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் நேற்றிரவு குவிந்தனர். போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இரவு பகல் பாராமல் காவேரி மருத்துவமனையில் காத்துக்கிடக்கும் தொண்டர்கள், அடுத்த மருத்துவ அறிக்கை எப்போது வரும் என்று எதிர்நோக்கியுள்ளனர்.

இன்று திமுக நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர் தொடர்ந்து காவேரி மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைமை சென்னை வருமாறு அழைப்பு விடுத்திருப்பதால், அவர்களும் சென்னைக்கு விரைந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவையனைத்தும் தொண்டர்களை பதற்றமடைய வைத்துள்ளது. 

இன்று காலை துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்ட திமுக மூத்த தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். பிறகு, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனும் மருத்துவமனைக்கு வந்தார். திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு சென்னை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களும் சென்னைக்கு விரைந்து கொண்டிருக்கின்றனர்.  தலைமை கழக நிர்வாகிகளுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முக்கியமான ஆலோசனை நடத்தி வருகிறார். 
 

click me!