
சென்னை அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி கட்சியினருக்கு பங்கீடு வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் விரைவில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதயடுத்து தமிழகத்தில் உள்ள உள்ள பிரதான கட்சிகள் தங்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களிடமிருந்து தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை பெற்றன.இதேபோல் திமுகவிலும் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.
விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மட்டுமல்லாது சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் சென்னையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு ,உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், 77 மாவட்ட செயலாளர்கள், 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 125 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது , மாநகராட்சிகளுக்கான மேயர் வேட்பாளர்கள் உள்ளிட்ட வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு, கூட்டணி கட்சியினருக்கு சீட்டுகள் ஒதுக்குவது உள்ளிடவற்றை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் திமுக நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும், குறிப்பாக மறைந்த திமுக முன்னாள் பொதுச் செயலாளரான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.