உற்சாகத்தில் திமுக தலைமை... மா.செ.க்கள், வேட்பாளர்கள் கூட்டத்துக்கு மு.க. ஸ்டாலின் ஏற்பாடு..!

By Asianet TamilFirst Published Apr 30, 2021, 9:12 AM IST
Highlights

வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறியுள்ள நிலையில், மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் வேட்பாளர்கள் கூட்டத்துக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2 அன்று எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு பிதைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாயின. இந்தக் கருத்துக்கணிப்பில் ரிபப்ளிக், சிஎன்எக்ஸ், இந்தியா டுடே, ஏபிபி, சி வோட்டர் உள்பட அனைத்து நிறுவனங்களும் தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன. இதனால், திமுக தலைமையும் அக்கட்சியின் தொண்டர்களும் உற்சாகத்தில் உள்ளனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுகவுக்கு அரியணை உறுதியாகிவிட்டது என்ற குஷியில் அக்கட்சியினர் உள்ளனர். 
தேர்தல் முடிவு ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட உள்ளதால், அன்றைய தினம் வேட்பாளர்கள் கட்சி முன்னணியினர் வாக்குச்சாவடிக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே அதற்கு முன்பாகவே கட்சியின் மாவட்டச் செயலாளர் கூட்டத்தைக் கூட்ட திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. சென்னையில் இருந்தபடி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தை நடத்த உள்ளார். 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுக முகவர்கள் எப்படி விழிப்புடன் இருக்க வேண்டும், தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் போன்ற ஆலோசனைகளை மு.க.ஸ்டாலின் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!