
திமுக ஆட்சியில் லாக்கப் மரணங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையை செங்குன்றம், அலமாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (31). இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் விசாரணைக்காக ராஜசேகரை அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது, திடீரென அவருக்கு உடல்நிலைக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, காவல்துறையினர் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனை அழைத்து சென்று பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் உயரதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் ஒரு லாக்-அப் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மீண்டும் ஒரு லாக்-அப் மரணம், சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட திரு.ராஜசேகர் என்பவர் காவல்நிலையத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை தருகிறது.
இந்த ஆட்சியில் லாக்-அப் மரணங்கள் தொடர்கதையாகி வருவதை நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இவ்வாட்சியில் லாக்-அப் மரணங்களை தடுக்கவோ, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ முடியாது என்பதை இச்சம்பவங்கள் நிரூபித்துவிட்ட நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விடியா அரசில் நடந்த லாக்கப் மரணங்கள் குறித்து சட்டப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.