காவேரி மருத்துவமனையின் அடுத்த அறிக்கை எப்போது வரும்..? காத்திருக்கும் தொண்டர்கள்

By karthikeyan VFirst Published Aug 7, 2018, 10:01 AM IST
Highlights

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த அடுத்த அறிக்கைக்காக திமுக தொண்டர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த காவேரி மருத்துவமனையின் அடுத்த அறிக்கைக்காக ஏராளமான திமுக தொண்டர்கள் விடிய விடிய மருத்துவமனையில் காத்துக்கிடக்கின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 10 நாட்களாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 27 மற்றும் 28ம் தேதிகளில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை தேறியது. எனினும் மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் இருப்பதற்காக மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த சில நாட்களாக கருணாநிதியின் உடல்நிலை சீராக இருந்த நிலையில், நேற்று மீண்டும் மோசமடைந்துள்ளது. நேற்று மாலை 6.30 மணிக்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், வயதுமூப்பின் காரணமாக முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது எனவும் மருத்துவ உதவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து கருணாநிதி கண்காணிக்கப்படுவார் எனவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைப் பொறுத்தே கணிக்க முடியும் எனவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இதனால் தொண்டர்கள் பதற்றமடைந்தனர். கடந்த வாரத்தை போலவே மீண்டும் ஏராளமான தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் நேற்றிரவு குவிந்தனர். போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்றிரவு 10 மணிக்கோ அல்லது இன்று காலையோ அறிக்கை மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே மருத்துவமனையில் காத்திருக்கும் தொண்டர்கள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள், கருணாநிதியின் உடல்நிலை குறித்த காவேரி மருத்துவமனையின் அடுத்த அறிக்கைக்காக காத்திருக்கின்றனர். 
 

click me!