முரசொலி நிலம்: கெடு விதித்தும் ட்விட்டர் பதிவுளை அழிக்காத டாக்டர் ராமதாஸ்... நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திமுக!

By Asianet TamilFirst Published Dec 3, 2019, 7:28 AM IST
Highlights

“முரசொலி இடம் குறித்து பதிவிட்ட டிவிட்டர் பதிவுகளை, நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரத்தில் நீக்கிவிடவேண்டும். 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதே காரணத்துக்காக பா.ஜ.க. பொதுச்செயலாளார் சீனிவாசனுக்கு ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கறிஞர் எஸ்.மனுராஜ் நோட்டீஸ் அனுப்பினார்.
 

முரசொலி நிலம் தொடர்பாக மன்னிப்பு கேட்க மறுத்த டாக்டர் ராமதாஸ் மீது திமுக அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளது. 

பஞ்சமி நிலம் பற்றிய பேசிய ‘அசுரன்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, ‘இது படம் அல்ல பாடம்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். இந்த ட்விட்டர் பதிவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், ‘முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம்’ என்று கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மறுப்பு தெரிவித்து முரசொலி நிலத்தின் பட்டாவையும் வெளியிட்டார். 
இதனையடுத்து மூலப்பத்திரம் எங்கே என்று கேட்டு டாக்டர் ராமதாஸ் மீண்டும் ட்விட்டரில் பதிவிட்டார். இதனையடுத்து இந்த விவகாரத்தில் நுழைந்த பாஜக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், தேசிய எஸ்.சி. ஆணையத்தில் புகார் அளித்தார். முரசொலி நிலம் தொடர்பாக பாஜக, பாமக, திமுக இடையே வாக்குவாதங்களும் நடைபெற்றுவந்தன. சீனிவாசனின் புகாரை விசாரிக்க எஸ்.சி. ஆணையம், முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்பியது. உதயநிதி சார்பில் ஆஜரான முரசொலி அறங்காவலர் ஆர்.எஸ். பாரதி, இந்த புகாரை விசாரிக்க எஸ்.சி. ஆணையத்துக்கு உரிமை இல்லை என்று தெரிவித்தார்.


மேலும் இந்த விவகாரத்தை கிளப்பிய டாக்டர் ராமதாஸ், சீனிவாசன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்படும் என்றும் ஆர்.எஸ். பாரதி தெரிவித்திருந்தார். இதன்படி, ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் நீலகண்டன் டாக்டர் ராமதாஸுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீசில், “முரசொலி இடம் குறித்து பதிவிட்ட டிவிட்டர் பதிவுகளை, நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரத்தில் நீக்கிவிடவேண்டும். 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதே காரணத்துக்காக பா.ஜ.க. பொதுச்செயலாளார் சீனிவாசனுக்கு ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கறிஞர் எஸ்.மனுராஜ் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நோட்டீஸுக்கு டாக்டர் ராமதாஸ் சார்பில் வழக்கறிஞர் பாலு மூலம் பதில் அளிக்கப்பட்டது. அதில், முரசொலி நிலம் தொடர்பாக டாக்டர் ராமதாஸ் கூறியது அவதூறு கிடையாது என்றும், ஏற்கனவே பலரும் இதுதொடர்பாகப் பேசியிருக்கிறார்கள் என்றும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக, டாக்டர் ராமதாஸுக்கு எதிராகப் பேசுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. டாக்டர் ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பதிவுகளை நீக்கவில்லை. இதேபோல சீனிவாசனும் மன்னிப்பு கோரவில்லை.

 
இந்நிலையில் டாக்டர் ராமதாஸ், சீனிவாசன் மீது திமுக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மனுவை முரசொலி அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி சென்னை, எழும்பூர் 13வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.  இந்த வழக்கு வரும் 5ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 

click me!