கனிமொழி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு.. இன்று எந்த மாவட்டம் தெரியுமா?

Published : Feb 07, 2024, 11:42 AM ISTUpdated : Feb 07, 2024, 12:06 PM IST
கனிமொழி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு.. இன்று எந்த மாவட்டம் தெரியுமா?

சுருக்கம்

2024 மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் மூன்றாவது நாளாக இன்று மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரில் சந்தித்து பரிந்துரைகளை பெறுகின்றனர். 

2024 மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், திமுக சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர். அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளரும், அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா, திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., திமுக மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., திமுக மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி இத்தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, பிப்ரவரி 5 ஆம் தேதி முதல், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் - நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துகள் என்ற தலைப்பில், பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு வருகிறது.

மேலும் எழுத்துப்பூர்வமாக, தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள் வழியாக, ஆன்லைன் மூலமாக கோரிக்கைகளை மக்கள் ஆர்வமாக அனுப்பி வருகின்றனர். தேர்தல் அறிக்கை பதிவீடுகளுக்கான காலக்கெடுவாக பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் திமுக அறிக்கை குழு மதிப்பீடு செய்த பின் அதிகாரப்பூர்வத் தேர்தல் அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் 5 ஆம் தேதி தூத்துக்குடியில் மக்களை நேரில் சந்தித்து பரிந்துரைகளை பெற்றனர். தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று கோரிக்கைகளை வழங்கினர். 6ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களை நேரில் சந்தித்தனர். அதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு பரிந்துரைகளை அளித்தனர்.

இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று மதுரை மாவட்டத்தில் மக்களை சந்தித்துள்ளனர். காலை 10 மணி முதல், மதுரை துவாரகா திருமண மண்டபத்தில் வைத்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்றுக்கொள்கின்றனர். அதில் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். வணிகர் சங்கங்கள், விவசாயிகள், பொறியாளர்  சங்கங்கள், தொழில் முனைவோர், அரிசி ஆலை உரிமையாளர்கள், மாணவர் சங்கங்கள், மக்கள் நல மன்றங்கள், பல்வேறு அமைப்புகளைச்சேர்ந்தவர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் தங்கள் கோரிக்கைகளை அளிக்கின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?