
ஜி.எஸ்.டி மசோதா குறித்து திமுக உறுப்பினர்கள் புரிதல் இல்லாமல் பேசிவருவதாகவும், ஜி.எஸ்.டியால் வணிகவரி ரூ.4,400 கோடி அதிகரிக்கும் எனவும் ஒ.பி.எஸ் அணியின் மாஃபா பண்ண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மறைமுக வரி விதிப்பைச் சீர்படுத்தி, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையை கொண்டு வர மோடி அரசு திட்டம் தீட்டியது.
இதையடுத்து ஜி.எஸ்.டி மசோதா மீதான விவாதம் தொடர்ந்து இரண்டு நாட்கள் டெல்லியில் நடைபெற்றது. பின்னர், ஜி.எஸ்.டி மசோதா மாநிலங்களவையில் கடந்த 4 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.
இதைதொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ஜி.எஸ்.டி வரியால் யாரும் பயப்பட தேவை இல்லை என்றும், இதனால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு தகுந்த உதவிகளை அரசு பரிசீலனை செய்யும் எனவும் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய ஸ்டாலின் ஜி.எஸ்.டி மசோதா குறித்து வணிகர்களையும், தொழிலதிபர்களையும் அழைத்து பேசியிருக்க வேண்டும் என்றும், ஜி.எஸ்.டி மசோதாவை பொறுப்பு குழுவிற்கு அனுப்பி மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
எதிர்கட்சிகள் எதிர்ப்பையும் மீறி குரல் வாக்கெடுப்பு மூலம் ஜி.எஸ்.டி மசோதா சட்டபேரவையில் நிறைவேறியது. இதனால் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இந்நிலையில், ஒ.பி.எஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜி.எஸ்.டி மசோதா குறித்து திமுக உறுப்பினர்கள் புரிதல் இல்லாமல் பேசிவருவதாகவும், ஜி.எஸ்.டியால் வணிகவரி ரூ.4,400 கோடி அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.