ஆமாய்யா! சீட் கொடுத்தா, எவ்வளவு செலவு பண்ணுவே?ன்னு நேர்காணல்ல கேட்கிறோம்.. தி.மு.க. ஓப்பன் டாக்..

Published : Jan 06, 2022, 04:23 PM IST
ஆமாய்யா! சீட் கொடுத்தா, எவ்வளவு செலவு பண்ணுவே?ன்னு நேர்காணல்ல கேட்கிறோம்.. தி.மு.க. ஓப்பன் டாக்..

சுருக்கம்

அது மெய்யோ! பொய்யோ! ஆனால்…தேர்தல் வந்தால், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை தமிழகத்தில் சர்வசாதாரண நடைமுறையாக்கியது தி.மு.க தான் எனும் ஒரு விமர்சனம் இருக்கிறது.

அது மெய்யோ! பொய்யோ! ஆனால்…தேர்தல் வந்தால், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை தமிழகத்தில் சர்வசாதாரண நடைமுறையாக்கியது தி.மு.க தான் எனும் ஒரு விமர்சனம் இருக்கிறது. கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி, தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்தபோது, திருமங்கலம் தொகுதியில் ஒரு இடைத்தேர்தல் நடந்தபோது தி.மு.க.வினர் வாக்குக்கு பணத்தை அள்ளிவிட்டதாக பெரும் பரபரப்பு உருவானது. பத்திரிக்கைகளும், மீடியாக்களூம் மாய்ந்து மாய்ந்து அதை பேசினர். அதிலிருந்துதான் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை ‘திருமங்கலம் ஃபார்மூலா’ என்று குறிப்பிட துவங்கினர்.

அப்படியானால், மற்ற கட்சிகள் ஓட்டுக்கு பணமே கொடுக்காத அளவுக்கு அவ்வளவு ஒழுக்க சீலர்களா? என்று நீங்கள் மலைக்கவேண்டாம். எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிக்கொண்டிருப்பவர்களே.

ஆக ஏற்கனவே இப்படியொரு பெயரினை தி.மு.க. எடுத்து வைத்திருக்கும் நிலையில், இப்போது “உள்ளாட்சி தேர்தலில் நிற்க முயற்சிக்கும் சொந்த கட்சி நபர்களிடம் ‘எவ்வளவு செலவு பண்ணுவ?’ என்று நேர்காணலில் கேட்கிறார்கள். அப்ப கட்சி விசுவாசம், நீண்டநாள் கழக பணி, கடும் உழைப்பு, கட்சிக்காக கைதானது.. இதெல்லாம் விஷயமே இல்லையா. காசு நிறைய இருந்தால், நேற்று கட்சிக்கு வந்தவருக்கும் சீட் கொடுத்துடுவாங்களா? சரி, பணத்தை பார்த்து இவங்க சீட் கொடுக்கட்டும். ஆனால் பணத்தை மட்டுமா நம்பி மக்கள் ஓட்டு போடுவாங்க? ஒரு தப்பான பணக்காரனுக்கு தி.மு.க. சீட் கொடுத்தால், அவன் கொடுக்கும் பணத்தை வாங்கிட்டு, அவரை விட நல்ல நபரான எதிர்க்கட்சி வேட்பாளரை தேர்வு செய்ய மாட்டாங்களா என்ன! இப்படியே பல இடங்களில் நடந்தால், நட்டம் யாருக்கு? ஏன் தி.மு.க. இப்படி போய்க்கொண்டிருக்கிறது?” என்று விமர்சனங்கள் கொதிக்கின்றன.

இது ஏதோ மேம்போக்கான விமர்சனங்கள் இல்லை. இதை நிரூபிக்கும் வகையில் சில உதாரணங்களும் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அறிவாலயத்தில் சென்னையில் உள்ள மாநகராட்சி மற்று நகராட்சி உள்ளிட்ட பல நிர்வாக அமைப்புகளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளோருக்கான நேர்காணல் நடந்திருக்கிறது. அப்போது நேர்காணலுக்கு உட்கார்ந்த ஒவ்வொருவரிடமும், “உன் வார்டுல எவ்வளவு பா செலவு பண்ணுவ? எவ்வளவு உன்னால செலவு பண்ண முடியும்?” என்று கேட்கப்பட்டதாம். குறிப்பாக சென்னை மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் தி.மு.க.வினர் தங்கள் வார்டில் ரெண்டு கோடி ரூபாய் வரை செலவு பண்ணும் திறன் இருந்தால் மட்டுமே சீட் வாய்ப்பு எனும் சூழல் உருவாகியுள்ளதாம். நேர்காணலில் கலந்து கொண்ட பலர் இதை வெளியில் உறுதி செய்துள்ளனர்.

நேர்காணலை நடத்தும் கட்சி நிர்வாகிகளும் “ஆமா, சீட் கேட்கும் நபர்களிடம் ’எம்மாம் பணம் செலவு பண்ணுவே!?’ன்னு கேட்கத்தான் செய்றோம். அதுக்கு இன்னா இப்ப?” என்று கெத்தாக பதில் சொல்கிறார்கள்.

பண செல்வாக்கை பார்த்துதான் ஆளுங்கட்சியான தி.மு.க.வில் வேட்பாளர்களை நிர்ணயிக்கிறார்கள் எனும் விமர்சனம் பற்றி பேசும்  அதன் செய்தி தொடர்பாளரான டி.கே.எஸ். இளங்கோவன், “என்னாங்க பண்றது? பத்து வருஷமா அ.தி.மு.க.காரங்க தமிழகத்தில் எல்லா விஷயங்களையும் கெடுத்து வெச்சிருக்காங்க. எந்த தேர்தலானாலும் பணம் என்பது தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டது. முறைகேடான வழியில் பணத்தை சம்பாதித்து வைத்திருக்கும் அ.தி.மு.க. வேட்பாளர்கள், தேர்தல் வந்தாலே பணத்தை வாரி இறைக்கிறார்கள். எனவே அ.தி.மு.க.வை வீழ்த்த மக்கள் சக்தியோடு சேர்த்து பணமும் தேவைப்படுகிறது. அதனால்தான் அந்த கேள்வியை எங்கள் கட்சியின் சில நேர்காணல்களில் கேட்டிருக்கலாம். மற்றபடி, மக்கள் செல்வாக்கு உள்ள நபரைத்தான் தலைமை, வேட்பாளர்களாக நிறுத்தும்.” என்றிருக்கிறார்.

நீங்க சொன்ன கடைசி வரியை நம்பிட்டோமுங்க!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?