மதுக்கடை திறப்பதற்கு எதிராக திமுக கூட்டணி அதிரடி முடிவு... முதல்வர் எடப்பாடி அதிர்ச்சி..!

By vinoth kumarFirst Published May 6, 2020, 1:47 PM IST
Highlights

கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அதிமுக அரசைக் கண்டிக்கிறோம்" என முழக்கமிட்டுக் கலைவதென்றும், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துப்பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசின் தோல்வி அடைந்துவிட்டதாகவும், அரசுக்கு எதிராக நாளை மக்கள் அனைவரும் கருப்பு சின்னம் அணிந்து அரசுக்கு எதிராக முழக்கமிட வேண்டும் என்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

இது தொடர்பாக திமுக கூட்டணி தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி மக்களிடையே ஏற்படுத்தி வரும் பாதிப்பு,  இழப்பும், அச்சம் தருவதாக உள்ளது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இதே கதியில் தொடருமானால், அது எங்கே போய் முடியுமோ என்று எண்ணிப் பார்க்கவே இதயம் படபடக்கிறது. ஆனால், மாநிலத்தை ஆளும் அதிமுக அரசின் அணுகுமுறைகளையும், முடிவுகளையும், நடவடிக்கையும் பார்த்தால் கொரோனா குறித்த முழுமையான பார்வையும், ஏழை எளிய நடுத்தர மக்களின் எதிர்காலம் பற்றிய சரியான கணிப்பும் போதிய அளவுக்கு இல்லை என்று தோன்றுகிறது. கொரோனா கடுமையாக பரவிவரும் நிலையில், ஏதோதோ புள்ளி விவரத்தை சொல்லி சமாதானப்படுத்தும் முயற்சி தெரிகிறதே தவிர, அடிப்படை உண்மைகளை ஒளிவு மறைவின்றி வெளியிட்டு அனைவரையும் உணர உணர செய்து, ஒத்துழைப்பைக் கோரி உடன் அழைத்துச் செல்லும் எண்ணம் அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை.

கொரோனா எதிர்கொள்ளத் தேவைப்படும் மருத்துவ கட்டமைப்பு உருவாக்கிட கிடைத்த வாய்ப்பினை கைநழுவ விட்டார்கள். தொடக்கத்திலேயே தலை நகரத்திலும் ஏனைய மாவட்டங்களிலும், மக்கள் தொகை அடர்த்தியின்  அடிப்படையில், தீவிரமாக பாதிக்கப்படப் போகும் பகுதிகளை அடையாளப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில் போதுமான கவனம் செலுத்தவில்லை.  இது மறைமுக எதிரி நடத்தப்படும் போர், போர்க்காலத்தில் அடி வரை நுனிவரை ஒருங்கிணைப்பும், கடமையும், பொறுப்பும் இவற்றைப் பரவலாக்குதலும் அவசியம்.

அதிமுக அரசின் அறிவியல் பூர்வமான ஒருங்கிணைப்பு இல்லை, அதிகாரத்தை மையப்படுத்துவதிலேயே அரசு கவனம் செலுத்துவதாக தெரிகிறது. போர் பாலத்தில் அரசியலுக்கு இடமில்லை.  ஆனால், அதிமுக அரசு, அரசியல் கணக்குப் போட்டு பல தரப்பிலிருந்தும், குறிப்பாக எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், வல்லுநர்கள் மற்றும் சான்றோர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆலோசனை செய்யும் மனநிலையில் இல்லை. தாமதமாகவேனும் உணரும் நிலை இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் காணப்படவில்லை என்பது வருந்துதற்குரியது. 

 

 ஊரடங்கு அரசு படிப்படியாக ரத்து செய்து, அதன் வலிமையைக் குறைப்பது என்பது அப்பாவி பொதுமக்களை நட்டாற்றில் கைவிடுவதற்கு ஒப்பாகும். தினக்கூலி தொழிலார்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடங்கியதால் வேலை இழந்தோர். சிறு வணிகர்கள், இங்கிருக்கும் பிற மாநிலத் தொழிலாளர்கள் ஆகியோரின் பிரச்சினைகளை முன்கூட்டியே எதிர்பார்த்து அவற்றுக்கான தீர்வுகள் மத்திய, அரசு மாநில அரசுகள் சிந்திக்கவில்லை. ஆனால் மே 7-ஆம் தேதி முதல் மதுபான கடை திறப்பது இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவின் காரணமாக சமூகத் தொற்று மேலும் பரவலாகும் வாய்ப்பே அதிகம் என்பதால் அரசின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். 

 மார்ச் 24 முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்களுக்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை.  தோராயமாக இதற்கு 3,850 கோடி ரூபாய் தேவைப்படும். 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் ஆண்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் அரசுக்கு இது சாத்தியமாகும்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையில் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். முன்கள வீரர்களான அவங்களுக்குக் கூட பாதுகாப்பு உபகரணங்களை வழங்காத தமிழக அரசின் மெத்தனத்தைக் கண்டிக்கிறோம். கொரோனா நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமலும், தொற்றை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாகச் செய்யாமலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம், மீட்பு நடவடிக்கை மறுவாழ்வு பற்றிக் கவலைப்படாமலும், திடீரென மதுபானக் கடைகளைத் திறப்பதில் மட்டும் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசைக் கண்டிக்கும் வகையில்.

மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்காததை கண்டித்தும், மே 7-ம் தேதி ஒருநாள் மட்டும் கருப்புச் சின்னம் அணிவது என்றும், அன்று காலை 10 மணிக்கு அவரவர் இல்லத்தின் முன் ஐந்து பேருக்கு அதிகமாகாமல் பதினைந்து நிமிடங்கள் நின்று, " கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அதிமுக அரசைக் கண்டிக்கிறோம்" என முழக்கமிட்டுக் கலைவதென்றும், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துப்பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அலட்சியமும், ஆணவமும் கொண்ட தமிழக அரசுக்கு, கொரோனா நோய்த் தொற்று தமிழகத்தில் ஏற்படுத்தி வரும் பெரும் பாதிப்பை உணந்த்திடும் வகையில் தமிழக மக்கள் அனைவரும் கருப்புச் சின்னம் அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திட வேண்டிக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழக மக்கள் அணியப் போகும் கருப்புச் சின்னம், அதிமுக அரசின் கண்களைத் திறக்கட்டும் இவ்வாறு திமுக அதன் கூட்டணிக்கட்சித்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

click me!