
காத்திருந்தவன் பெண்டாட்டியை, நேற்று வந்தவன் கொண்டுபோன கதையாக, 30 வருடமாக கட்டிக்காத்த கட்சியையும், ஆட்சியையும் மற்றவர்கள் கவர்ந்து செல்ல அனுமதிக்க கூடாது என்ற ஒரே நோக்கத்தில், சிதறி கிடந்த சசிகலா உறவுகள் அனைத்தும் ஒரே அணியில் திரண்டுள்ளன.
தமக்கும் தமது குடும்ப உறவுகளுக்கும் விசுவாசமாக இருப்பார் என்று தினகரானால், அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவர் பன்னீர். அவர் எம்.எல்.ஏ, அமைச்சர், முதல்வர் என அனைத்து பதவிகளையும் பெறுவதற்கு காரணமாக இருந்தவரும் தினகரனே.
ஆனால், அவர்தான் இன்று சசிகலா, தினகரன் உள்ளிட்டவர்கள் சிறையில் இருப்பதற்கும், கட்சியின் பெயர், இரட்டை இலை சின்னம் ஆகியவை தேர்தல் ஆணையத்தால் முடக்கப்படுவதற்கும் காரணம் என்று சசிகலா குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேபோல், சசிகலா சிறை செல்ல நேர்ந்த போது, தினகரனை முதல்வர் பதவியில் அமர வைக்காமல், தமக்கு விசுவாசமாக இருப்பார் என்று நம்பி எடப்பாடியை அமர வைத்து சென்றார். ஆனால், அவரும் விசுவாசமாக நடந்துகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
சசிகலாவும், தினகரனும் சிறையில் இருப்பதால், கட்சி மற்றும் ஆட்சியில் அந்த குடும்பத்தின் பிடி, முக்கால் வாசி தளர்ந்து விட்டது.
இந்நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் இணைக்கப்பட்டால், சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் முற்றிலும் அகன்றுவிடும் என்று, அவர்கள் அஞ்சுகின்றனர்.
அத்துடன், தம்மை முதல்வராக அமர வைத்த சசிகலாவுக்கு விசுவாசம் காட்ட வேண்டிய எடப்பாடி, தம்முடைய முதல்வர் பதவியை தக்க வைத்து கொள்ளவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், முழுக்க, முழுக்க, பிரதமர் மோடிக்கு விசுவாசமாக செயல்பட்டு வருகிறார்.
இதனால், வெறுத்து போன சசிகலா, தமக்கு ஆதரவான முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சில எம்.எல்.ஏ க்களை, எடப்பாடிக்கு எதிராக தூண்டிவிட்டு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார்.
ஆனால், முதல்வர் பதவியையும் தக்க வைத்து கொள்ள வேண்டும், அதே சமயத்தில் சசிகலா கட்டுப்பாட்டில் இருந்தும் விடுபட வேண்டும் என்று விரும்புகிறார் எடப்பாடி.
அதற்கு வலு சேர்க்கும் வகையில், மோடியின் வழிகாட்டுதலுடன், பன்னீர் அணியை இணைக்கும் முயற்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அதனால், அதிமுகவில் தினகரன் அணி என்று மூன்றாவதாக ஒன்று முளைத்து விட்டது.
ஒரு வேளை, பன்னீர் அணி, எடப்பாடி அணியுடன் இனைந்து விட்டால், சசிகலா குடும்ப ஆதிக்கம் என்பது முடிவுக்கு வந்து விடும். அதனால், அதற்கு முட்டுக்கட்டை கொடுக்கும் வகையில். தற்போது புதிது புதிதாக பல அணிகள் முளைத்து வருகின்றன. அவற்றை பின்னணியில் இருந்து இயக்குவது சசிகலா குடும்பமே.
இந்நிலையில், கட்சி மற்றும் ஆட்சியில் மீண்டும் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அந்த குடும்பத்தை சேந்த ஒருவர் அரசியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று மன்னார்குடி உறவுகள் விரும்புகின்றன.
அதற்கு, தற்போதுள்ள நிலையில், திவாகரன் மட்டுமே பொருத்தமானவர் என்று சசிகலா உறவினர்கள் நம்புகின்றனர். அதே சமயம், அவருக்கு தினகரன் தரப்பில் இருந்து எதிர்ப்பு வராமல் இருக்கு வகையில், சசிகலாவின் கணவர் நடராசன், திவாகரனை சிறையில் சென்று சந்தித்து சமரசம் செய்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.
எனவே, கூடிய விரைவில், திவாகரன் அதிமுகவின் துணை பொது செயலாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பன்னீரையும் எடப்பாடியையும் பந்தாடிவிட்டு, ஒரு பொம்மையை முதல்வர் பதவியில் அமர வைக்க வேண்டும் என்பதுதான், திவாகரனுக்கு கொடுக்கப்பட்டுள்ள முதல் அசைன்மென்ட்.
அதே சமயம், பன்னீரையும், எடப்பாடியையும் பயன்படுத்தி, மோடி அதற்கு எப்படி பதிலடி கொடுக்க போகிறார்? என்ற ஒரு கேள்வியும் தொக்கி நிற்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.