
டுவிட்டர் பக்கத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூவும் வார்த்தையால் வசைபாடியிருப்பது நெட்டிசங்களுக்கு தெருக்குழாய் குடுமிப்பிடி சண்டையை நினைவு படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் பா.ஜ.கவுக்கு வந்தால் கட்சி கூடுதல் பலம் பெறும் எனவும், எனவே அவர் பாஜகவில் இணைய வேண்டும் எனவும் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார்.
இந்த பேட்டியை தமிழிசை அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு பதில் அளித்து பதிவிட்ட குஷ்பு ‘இப்படி கெஞ்சி கட்சிக்கு யாரையும் இழுக்க கூடாது. உங்கள் சித்தாந்தங்களால் கவரப்பட்டு மக்கள் தாமாக வந்து சேரவேண்டும். இல்லாவிட்டால் பிச்சை எடுப்பது போல் இருக்கும் என தெரிவித்திருந்தார்.
இதனால் சினங்கொண்ட தமிழிசை ‘உங்கள் வார்த்தையில் இருந்தே உங்கள் மனம் எப்படிப்பட்டது என்பது தெரிகிறது. கட்சியில் சேருவதா? கட்சிக்கு தாவுவதா? என்ற உங்கள் சித்தாந்தமும் புரிகிறது என பதிலடி கொடுத்தார்.
எது நல்ல கட்சி என முடிவெடுக்க என்னால் முடியும் எனவும், காங்கிரசை எனக்கு பிடித்ததால் தான் இங்கு வந்தேன் எனவும், என்னை அழைக்க யாரும் தூது விடவில்லை என தெரிவித்தார் குஷ்பு.
இதற்கு பதிலளித்து பேசிய தமிழிசை தி.மு.க.வில் இருந்து உங்களை துரத்தினார்களே என்று விளாசினார்.
குஷ்புவும் பதிலுக்கு மல்லுகட்டி பேசினார். உங்கள் எண்ணம் தவறானது மேடம். நீங்கள் என்ன என் பி.ஆர்.ஓ.வா. நான் என்ன காரணத்துக்காக தி.மு.க.வில் இருந்து வெளியே வந்தேன் என்பது தெரியுமா? என்று கூக்குரலிட்டார்.
ஆமா, நீங்க மனநல மருத்துவரா? பொது மருத்துவரா? என்று ஒரு பிடிபிடித்தார்.
அதற்கு ‘நான் ஒரு டாக்டர் என்ற முறையில் அடுத்தவர் மூளையை ‘ஸ்கேன்’ செய்து என்னால் அறியமுடியும்’ என்றார் தமிழிசை.
இதனிடையே விபரம் அறிந்த வாசகர் ஒருவர் உள்ளே புகுந்தார். அப்போது 2014-ல் நீங்கள் தி.மு.க.வில் இருந்து வெளியே வந்ததும் உங்களுக்கும் இப்படி அழைப்பு விடுக்கத்தானே செய்தார்கள் குஷ்பு மேடம் என கூற அவரது கூக்குரல் அப்படியே அடங்கியது.
தமிழிசை கூட அழைப்பு விடுத்திருந்தாரே! அப்போதெல்லாம் நீங்கள் இப்படி பேசவில்லையே என்று ஓட்ட ஆரம்பித்தார் வாசகர்.
இதை புரிந்து கொண்ட குஷ்பு நுணுக்கமாக நழுவினார். நான் ஒரு மூத்த அரசியல் தலைவர் என்ற ரீதியில் தமிழிசையை மதிக்கிறேன் எனவும் ஒரு பெண் தலைவர் என்ற முறையிலும் மறுப்பதற்கில்லை எனவும் இன்னொரு கோணத்தில் எனது கருத்தையும் சொல்கிறேன் என்று தப்பித்து ஓடினார் குஷ்பு.