
’என் கட்சிக்காரர்கள் ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் நானே அவர்களைக் காட்டிக்கொடுப்பேன்’ என்று உளறிக்கொட்டும் கமல் மாவட்ட பொறுப்பாளர்களைக் கூட மதிப்பதில்லை. கட்சி இப்போது அவரது கட்டுப்பாட்டில் இல்லை. தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது’ என, நீக்கப்பட்ட விருதுநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடியும் வரை கூட பொறுமை காக்காமல் கமல் அடிக்கடி கட்சியின் பொறுப்பாளர்கள் சிலரை நீக்குவதும் இன்னும் சிலர் சைலண்டாக வெளியேறி வருவது மக்கள் நீதி மன்றத்தில் ஒரு தொடர்கதை ஆகிவருகிறது. கட்சியில் விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சிலரைத்தவிர யாரும் அவரை நெருங்க முடியவில்லை என்ற புகார்களும் தொடர்கின்றன.
இந்நிலையில் கடைசியாக கட்சியை விட்டு நீக்கப்பட்ட விருதுநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன் பேசுகையில்,” மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை மதிப்பதில்லை. கட்சியின் மாநில துணைத்தலைவர் மகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் அருணாச்சலம் ஆகியோரின் பிடியில் கமல்ஹாசன் உள்ளார். கட்சி அவரது கையில் இல்லை. மாவட்ட பொறுப்பாளர்களிடம் கடந்த 4 மாதமாக அவர் தொடர்பு கொள்ளவில்லை.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 மாவட்ட பொறுப்பாளர்கள் வெளியேறி உள்ளனர். தேர்தல் முடிவதற்குள் ஏராளமான நிர்வாகிகள் அவரது கட்சியிலிருந்து விலகுவார்கள். அவருக்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்தேன். தென்மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து ரூ. 65 லட்சம் செலவு செய்து, நெல்லையில் பொதுக்கூட்டம் நடத்தினோம். இதற்காக எங்களுக்கு நன்றி, வாழ்த்து என ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இவ்வளவு நாள் கட்சியில் இருந்தோமே என்பதற்காக சொல்லத் தயக்கமாக இருக்கிறது. ஆனால் வேறு வழியில்லை உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும். எங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சி இந்தத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட டெபாசிட் வாங்காது” என்கிறார் அவர்.