பொதுக் குழுவில் அவமரியாதை.. இன்று இரவே டெல்லி விரைகிறார் ஓபிஎஸ்..?? பதறும் இபிஎஸ்.

By Ezhilarasan BabuFirst Published Jun 23, 2022, 7:23 PM IST
Highlights

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு டெல்லி விரைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட 5 பேர் இன்று இரவு டெல்லி இணைய உள்ளதாக கூறப்படுகிறது. 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு டெல்லி விரைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட 5 பேர் இன்று இரவு டெல்லி இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர் செல்வத்தை அவமதிக்கும் வகையில் சம்பவங்கள் நடந்த நிலையில் அவர் இன்று டெல்லி விரைய உள்ளதாக வெளியாகி உள்ள  தகவல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரை குழப்பமடைய வைத்துள்ளது. 

களேபரங்களுக்கு மத்தியில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்  வானகரத்தில் தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது அதில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் அனைத்து பொதுக்குழு தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர் இரட்டை தலைமையால் கட்சியில் சுணக்கம் உள்ளது. ஒருங்கிணைப்பு இல்லாத நிலை உள்ளது, கட்சி திமுகவை எதிர்த்து செயல்பட முடியாத நிலையில் உள்ளது. எனவே இந்த பொதுக்குழுவில் இரட்டை தலைமை ரத்து செய்துவிட்டு ஒற்றை தலைமையை குறித்து விவாதிக்க வேண்டும், அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை அறிவிக்க வேண்டும் என பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஜூலை 11ஆம் தேதி அடுத்த பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். அன்று அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை நியமிக்கப்படும் என கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பன்னீர்செல்வம் மற்றும் வைத்தியலிங்கம் சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் இந்த பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறிவிட்டு வெளியேறினார். முன்னதாக அரங்கில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பியதுடன் பொதுக் குழுவில் இருந்து வெளியேறும்படி அவரை எச்சரித்து வந்தனர். துரோகி வைத்தியலிங்கம் வெளியே போ என்றும் தொடர்ந்தும் முழங்கிக் கொண்டிருந்தனர். அதேபோல்  ஓ பன்னீர் செல்வத்தின்  மீது வாட்டர் பாட்டில் வீசப்பட்டது, இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல்  ஓ.பன்னீர்செல்வம் வந்த வாகனத்தின் டயர்கள் பஞ்சர் செய்யப்பட்டது, இப்படி பொதுக்குழு ஆரம்பிக்கப்பட்டு முடியும்வரை அவருக்கு எதிரான முழக்கங்கள் அவமரியாதைகள் அங்கு அரங்கேறிக் கொண்டே இருந்தது. இதனால் மன உளைச்சல் அடைந்த ஓ.பன்னீர்செல்வம் வேகவேகமாக வீடு திரும்பினார். இதையடுத்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் வந்து சந்தித்தனர். அப்போது சி.டி ரவி நாளை குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ளது அதில் தாங்கள் கலந்து கொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் அதில் கலந்து கொள்ள ஓ.பன்னீர்செல்வம் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அவருடன் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது கட்சியின் நிலவரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கவும் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுப்பது குறித்தும் டெல்லியில் இருந்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஓ.பன்னீர் செல்வத்தின் திடீர் டெல்லி பயணம் தகவல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மத்தியில் பதட்டத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. 
 

click me!