
சசிகலா குடும்பத்தில் நடந்த மெகா ரெய்டுக்குப்பிறகு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லத்திலும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருவதால் அதிமுக தொண்டர்கள் பெரும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.
கடந்த 9 ஆம் தேதி சசிகலா உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் நிறுவனம் என ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது 6 நாட்களுக்கு மேலாக நீடித்தது. இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் சசிகலா குடும்பத்தினர் ஒவ்வொருவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் அறையில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமானவரித்துறையினரின் இந்த அதிரடி ரெய்டால் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை அடுத்து அக்கட்சியின் துணைப்பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தங்களின் ஆட்சியை, பதவியை காப்பாற்றிக்கொள்ள கழகத்தை அடகு வைத்த எடப்பாடியும் பன்னீரும் இன்னும் எத்தனை துரோகங்களை செய்யக் காத்திருக்கிறார்கள்..?
அடுத்த சில நிமிடங்களிலேயே போட்ட அடுத்த பதிவில்... போயஸ் கார்டனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், இது அம்மாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம். இந்த துரோகத்தின் பின்னணியில் எடப்பாடியும் பன்னீர்செல்வமும்தான் இருக்கிறார்கள்.
அடுத்த பதிவில்... அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் அவர்கள் இருவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும். தொண்டர்களையும் மக்களையும் தொடர்ந்து ஏமாற்றி வரும் எடப்பாடியின் துரோக அரசு, இந்த துரோக செயலுக்கு என்ன பதில் சொல்ல போகிறது? என இவ்வாறு தனது ஆதங்கத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.