சசிகலா சகோதரர் திவாகரன் மற்றும் ஜெயானந்தை விமர்சித்து தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மதவாத சக்திகளுக்கு அடிமையாகிப் போன பழனிசாமியோடு தொடர்பு வைத்து கொண்டு சசிகலாவை சிறையில் இருந்து மீட்கப்போகிறேன் என்ற ரீதியில் திவாகரன் செயல்படுவது உண்மைக்கு புறம்பானது என்றும வெற்றிவேல் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு இரு அணிகளாகப் பிரிந்தது. சசிகலா, தினகரன் தலைமையில் ஓர் அணியும் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியும் உருவானது. தற்போது, சசிகலாவின் சகோதரர் திவாகரன் மற்றும் அவரது மகன் ஜெயானந்துக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. தினகரன் கட்சியை ஜெயானந்த் தனது பேஸ்புக் பக்கத்தில தாக்கி எழுதி வருகிறார். இந்த நிலையில், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், திவாகரன் மற்றும் ஜெயானந்தை விமர்சித்து பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கழகத்தின் ஆணி வேராக சின்னம்மாவும், கழகத்தின் முகமாக துணை பொது செயலாளர் டிடிவி தினகரனும் செயல்பட்டு வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. துரோகத்தாலும், சூழ்ச்சியாலும் சிசிகலா சிறைக்கு சென்ற பிறகு, பல்வேறு அடக்கு முறைகள், அத்துமீறல்களுக்கு மத்தியில் கழகத்தை வலிமையோடு முன்னெடுக்கும் பணியில் தினகரன் செயலாற்றி வருகிறார். அவருக்கு துணையாக நான் உட்பட 18 + 3 சட்டமன்ற உறுப்பினர்களும் எண்ணிலடங்கா கழக தொண்டர்களும் உள்ளோம்.
எங்களது தியாகத்தை கொச்சைப்படுத்தும் நோக்கிலும், எங்கள் உணர்வை காயப்படுத்தும் எண்ணத்திலும், சசிகலா குடும்பத்தைச் சார்ந்த திவாகரனும், ஜெயானந்தும் செயல்படுவது வேதனை அளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும், சசிகலாவின் மீது சுமத்தப்பட்ட பொய்யான வீண் பழிகளையும், தங்கள் குடும்பத்தின் மீது சுமத்தப்பட்ட பழி சொற்களையும் அண்ணன் தினகரன் கழகத்தைத் தலைமையேற்று நடத்திய இந்த காலகட்டத்தில்தான் முறியடிக்க முடிந்தது என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள்.
மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் அடிபணியக் கூடாது என்ற காரணத்தினால்தான், சசிகலா சிறைக்கு சென்றார். ஆனால், ஏதோ தங்கள் பின்னால் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதுபோல் தோற்றத்தை உருவாக்கி, அதே மதவாத சக்திகளுக்கு அடிமையாகிப்போன பழனிசாமியோடு தொடர்பு வைத்துக் கொண்டு சசிகலாவை சிறையில் இருந்து மீட்கப்போகிறேன் என்ற ரீதியில் திவாகரன் செயல்படுவது உண்மைக்கு புறம்பானது என்றார்.
எடப்பாடி அணியைச் சேர்ந்த சத்திரப்பட்டி சிவகிரி என்பவர் 18 சட்டமன்ற உறுப்பினர்களும், திவாகரன் பின்னால்தான் இருக்கிறார்கள் என்பதைப் போன்ற ஒரு பொய் பரப்புரையை செய்கிறார். இவர் யார் தூண்டுதலின் பேரில் செயல்படுகிறார் என்பது எங்களுக்குத் தெரியும். இந்த நேரத்தில் அனைவருக்கும் ஒன்றைத் தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன். எங்கள் தலைமை சசிகலாவும், டிடிவி தினகரனும்தான். இவர்கள் இருவரைத் தாண்டி, வேறு எவரின் கண்ணசைவுக்கும், குரலுக்கும் எங்கள் சிரம் அசையாது... எவருக்காகவும் எங்கள் தரம் மாறாது. எதுவரினும், எவர் எதிர்ப்பினும், எங்கள் பயணம் என்றும் சசிகலாவுடனும்,
தினகரனுடன்தான் என்பதில் மலையளவு உறுதியோடு இருக்கிறோம். காலத்துக்கும் இருப்போம் என்று அந்த பதிவில் வெற்றிவேல் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.