புதுச்சேரியில் உள்ள ஆடம்பர சொகுசு விடுதியில் தங்கியுள்ள, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் வாக்கிங், ஸ்விம்மிங், மது விருந்து, அசைவ உணவுகள் என, குதுாகலமாக பொழுதை கழித்து வரும் நிலையில் இன்று அவர்களை சந்திக்க டி.டி.வி.தினகரன் வருகிறார். அவர் தன்னுடன் மேலும் 3 எம்எல்ஏக்களை அழைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரி கடற்கரையை ஒட்டியுள்ள சின்ன வீராம்பட்டினம் கிராமத்தில், உள்ள, தி வின்ட் ப்ளவர் ரிசார்ட் என்ற, ஆடம்பர சொகுசு விடுதியில், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெற்றிவேல் எம்எல்ஏ தவிர மற்ற 18 பேரும் இங்கு தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஊஞ்சல், சீசா, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுக்கள் விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த எம்எல்ஏக்களை சந்திக்க டி.டி.வி. தினகரன் இன்று புதுச்சேரி செல்கிறார்.. அவருடன் மேலும் 3 எம்.எல்.ஏ.,க்கள் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்செல்வன், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது, சட்டசபையை கூட்டுவது பற்றி கவர்னர் எதையும் கூறாமல் உள்ளது டென்ஷனாக உள்ளது என்றார்.
இன்று மேலும் 3 எம்.எல்.ஏ.,க்கள் புதுச்சேரி ரிசார்ட்டிற்கு வர உள்ளனர் என்றும் டி.டி.வி.தினகரனுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த அங்கு ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்,