
இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றுவருகிறது.
இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணி சார்பில் 2400 பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்களும் தினகரன் அணி சார்பில் 1000 பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இவையனைத்தையும் ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் மீண்டும் இருதரப்பிடமும் விசாரணை நடத்திவருகிறது.
தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் அன்சாரியா, தினகரன் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறார்.
இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சியின் பெயர் முடக்கப்பட்டபோது சசிகலா மற்றும் ஓபிஎஸ் தலைமையிலான இரண்டு அணிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அந்த 2 அணிகளைத்தான் தற்போது ஏற்க வேண்டும்.
பழனிசாமி அணி, சசிகலா அணியுடன் இணைந்திருந்தபோது தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களையும் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்து தாக்கல் செய்த ஆவணங்களையும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற வாதம் தினகரன் அணி தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.