ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவு திரட்டும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 152பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை சசிகலா தரப்பு ஏற்கனவே நியமனம் செய்துள்ளது. இந்நிலையில், அதில் மேலும் 18 பேர் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா மறைவையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைதேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிமுக இரண்டாக பிளவடைந்து உள்ளதால் சசிகலா தரப்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் போட்டியிடுகிறார்.
இதையடுத்து அதிமுகவின் பிரதான சின்னமான இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்ததால் இரட்டை இலையை முடக்குவதாக தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டார்.
இதைதொடர்ந்து டி.டி.வி தினகரனுக்கு தொப்பி சின்னமும், மதுசூதனனுக்கு இரட்டை மின்விளக்கு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவு திரட்டும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 152 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை சசிகலா தரப்பு நியமனம் செய்தது.
ஆர்.கே.நகர் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளதால், சசிகலா தரப்பினர் சார்பில் பணிமனை பொறுப்பாளர்களாக செஞ்சி ந.ராமச்சந்திரன், நல்லுசாமி, தாமோதரன், உள்பட 18 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.