காங்கிரஸில் தில்லுமுல்லு.. எனது ரத்தம் கொதிக்கிறது... வெகுண்டெழும் ஜோதிமணி எம்.பி..!

By Thiraviaraj RMFirst Published Mar 13, 2021, 4:40 PM IST
Highlights

காங்கிரசில் வேட்பாளர் தேர்ந்தெடுப்பதில் நேர்மை இல்லை. பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெற முடியும் என்பது அக்கிரமம் என காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.
 

காங்கிரசில் வேட்பாளர் தேர்ந்தெடுப்பதில் நேர்மை இல்லை. பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெற முடியும் என்பது அக்கிரமம் என காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இன்னமும் பெயர்ப்பாளர் தேர்வு முடிந்தபாடு இல்லை. இந்த வேட்பாளர் தேர்வில் பல தில்லுமுல்லுகள் நடப்பதாக ஜோதிமணி இன்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘’காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை

.

நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம். காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் இரத்தத்திலும், வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை.

பணம் தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம்.பி கிடையாது. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும், நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது இரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன்.நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு’’ எனத் தெரிவித்துள்ளார்.

click me!