Pattina Pravesam: சர்ச்சையை ஏற்படுத்திய தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசம்.. கொடியேற்றத்துடன் துவக்கம்..

By Thanalakshmi VFirst Published May 12, 2022, 11:21 AM IST
Highlights

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மேலும் முக்கிய நிகழ்வான ஆதீனத்தை பல்லக்கில் சுமக்கும் நிகழ்வு வரும் மே 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 

தருமபுரம் ஆதீன திருமடத்தில் ஆதீன குருமுதல்வர் குருபூஜை நடைபெறவுள்ளது. இதனையொட்டி நடைபெறும் பட்டணப் பிரவேச நிகழ்வும் நடைபெறும். இந்த விழாவில், ஆதீன குருமகா சந்நிதானத்தை பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் சுமந்து செல்வர். இந்நிலையில் பட்டணப் பிரவேசத்திற்கு தடைவிதித்து  மயிலாடுதுறை கோட்டாட்சியர் கடந்த மாதம் 27 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். அதிமுக, பாஜக, இந்து அமைப்புகள் உள்ளிட்டவை பட்டணப் பிரவேசத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். அதே போல் காங்கிரஸ், இடது சாரி, விசிக உள்ளிட்ட கட்சிகள் மனிதனை மனிதன் சுமப்பது இழிவு செயல் இதற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்க கூடாது என்று தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையே பட்டணப் பிரவேச அனுமதி குறித்து சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். இதுக்குறித்து விளக்கமளித்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பட்டணப் பிரவேசம் குறித்து முதலமைச்சர் ஆலோசித்து நல்ல முடிவு எடுப்பார் என்று அறிவித்தார். இந்நிலையில் மன்னார்குடி ஜீயர், இந்துமத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது என்றும் இல்லையெனில் அமைச்சர் யாரும் ரோட்டில் நடமாட முடியாது என்றும் மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து இவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிட கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு அரசுக்கு எதிராக கடுமையாக விமர்சித்து மதுரை ஆதீனம் பேசியிருந்தார்.அதை தொடர்ந்து ஆளுங்கட்சியினரால் தன்னுடைய உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், இது குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்து பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தார். அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.

இதனிடையே பட்டண பிரவேசத்திற்கு விதித்த தடையை நீக்க முதல்வரை நேரில் சந்தித்து ஆதீனங்கள் கோரிக்கை வைத்தனர். இதனைதொடர்ந்து பட்டணப் பிரவேசத்திற்கான தடையை தமிழக அரசு நீக்கியது. இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் மே 22 ஆம் தேதி ஆதீனத்தை பல்லக்கில் அமர்த்தி சுமக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க: பட்டின பிரவேசத்திற்கு அரசு அனுமதி...! கேலி செய்யும் மதுரை ஆதினம்..வேதனையில் கி.வீரமணி..

click me!