
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமிழகத்துக்கு பொறுப்பு முதலமைச்சர் ஒருவரை நியமிக்க தேவையில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெற்று மீண்டும் பணியைத் தொடரும் வரையில் பொறுப்பு முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என பல்வேறு கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
அப்போலோ மருத்துவமனை சென்று முதலமைச்சர் உடல்நலம் குறித்து கேட்டறிந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, முதலமைச்சர் ஜெயலலிதா குணமடையும் வரை பொறுப்பு முதலமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும் என கூறினார்.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தற்போது தெமிழகத்துக்கு பொறுப்பு முதலமைச்சர் தேவையில்லை என்று கூறினார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தது, மரியாதை நிமித்தமானது என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.