இரட்டை இலைக்காக லஞ்சம் அளித்த புகாரின் கீழ் டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை செய்ய டெல்லி சிறப்பு போலீசார் இன்று விமானம் மூலம் சென்னை வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் உச்ச கட்ட குழப்பங்கள் நிலவி வருகிறது. அதுவும் அதிமுகவில் சொல்லவே தேவையில்லை. எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் என அனைவரும் பதவிக்கு ஆசைப்பட்டு பல புகார்களில் சிக்கி வருகின்றனர்.
கடந்த 17 ஆம் தேதி அதிகாலை டெல்லியில் சுகேஷ் சந்திரா என்ற நபர் டெல்லி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர தினகரன் 60 கோடிக்கு பேரம் பேசியதும் அதற்காக 1.30 கோடி ரூபாய் முன் பணம் கொடுத்ததும் தெரியவந்தது.
இதற்கு டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். உரிய ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில் டிடிவி தினகரன் எப்போது வேண்டுமேனாலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திராவும், டிடிவி தினகரனும் பேசிக் கொண்ட தொலைபேசி உரையாடலை கைப்பற்றி உள்ளதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகேஷ் சந்திரசேகரை 8 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சுகேஷ் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் இன்று மாலை 5.15 மணிக்கு விமானம் மூலம் டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் சஞ்சய் ஸ்ரவத் தலைமையில் போலீசார் சென்னை கிளம்புகின்றனர். அவர்களுடன் கைதான சுகேஷ் சந்திரசேகரையும் அழைத்து வருகின்றனர்.
டிடிவி தினகரனுடன் சுகாஷை உடன் வைத்து விசாரணை நடத்த உள்ளனர். தினகரன் மீது போடப்பட்டுள்ள பிரிவு 120(பி) பிணையில் வெளி வரமுடியாத பிரிவு என்பதால் கைதாகவும் வாய்ப்பு உண்டு.
ஆனால் தினகரன் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்கள் ஆலோசனைப்படி முன் ஜாமின் கோராததால் விசாரணை மட்டுமே நடக்கும் என்று தெரிகிறது.