“டிடிவி தினகரன் தலைமறைவு குற்றவாளி...” - டெல்லி போலீசார் அறிவிப்பு

First Published Apr 19, 2017, 12:24 PM IST
Highlights
delhi police announced ttv dinakaran as a criminal


அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் ஆணையத்துக்கு, இடை தரகர் சுகேஷ் சந்திரா என்பவர் மூலம் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாககுற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக  இடைத் தரகர் சுகாஷ் சந்திராவை, டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் அதிகாலையில் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1.30 கோடி, 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சுகேஷ் சந்திராவிடம் நடத்திய விசாரணையில், இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக ரூ.50 கோடி பேரம் பேசிய டிடிவி.தினகரன் அட்வான்சாக ரூ.10 கோடி கொடுத்தார் என கூறியதாக போலீசார் தெரவித்துள்ளனர்.

இதையடுத்து போலீசார், சுகேஷ் சந்திராவின் செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்தனர். அதில், டி.டி.வி. தினகரனுடன் இடைத்தரகர் சுகேஷ் கடந்த 15ம் தேதி பலமுறை பேசியது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் ஜாமீனில் வெளியே வரமுடியாதபடி 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக டி.டி.வி.தினகரனிடம் நேரில் விசாரிக்கவும் டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இடைத்தரகர்  சுகேஷ் சந்திராவிடம் விசாரணை நடந்து வருகிறது. இதைதொடர்ந்து, கூடுதல் ஆதாரங்களுடன் சென்னை வர டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.தற்போது ஓரளவு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், டெல்லி போலீசார் நாளை சென்னை வருவார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதில், “டி.டி.வி.தினகரன் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர். எந்த நேரத்திலும் அவர் வெளிநாடு தப்பி செல்லக்கூடும் என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், உஷாரான டெல்லி போலீசார், டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று டி.டி.வி.தினகரனை தேடப்படும் நபராக அறிவித்துள்ளனர்.

இதற்கான அறிவிப்பை நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு டெல்லி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளனர்.

மேலும், டிடிவி.தினகரன் பற்றிய அனைத்து தகவல்களையும் அனுப்பியுள்ளனர். விமானம் மற்றும் கப்பல் மூலம் அவர் வெளிநாட்டுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

தினகரன் மீதான டெல்லி குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கைகள், தீவிரம் அடைந்துள்ளது. டெல்லி போலீசார் சென்னை வந்து விசாரிக்கும்போது,  தினகரன் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இதுபற்றி டிடிவி.தினகரனிடம் கேட்டபோது, “என்னிடம் பாஸ் போர்ட் இல்லவே இல்லை. பிறகு நான் எப்படி வெளிநாடு தப்பி செல்ல முடியும். இது, ஆதராமற்ற குற்றச்சாட்டு” என்றார்.

click me!