கொரோனா பாதிப்பே இல்லை என்ற நிலை தற்போது வருவது சாத்தியமில்லாதது. ஏனெனில், நாடு முழுவதும் அப்படி ஒரு நிலை இல்லை. கொரோனா வைரசுடன் வாழ தயாராக வேண்டும். டெல்லி முழுவதையும் சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக சந்தைகள், மால்களை திறக்க முடியாது.
கொரோனா வைரஸை 100 சதவீதம் ஒழித்துவிட்டுதான் வெளியே வர முடியும் என்றால் அது சாத்தியமில்லை. ஆகையால், கொரோனா வைரஸுடன் வாழ்வதற்குத் தயாராகுங்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்தியா முழுவதும் கொரோனா பாதித்த பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் சில தளர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கொரோனா நோய்த்தொற்றால் 4,549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,362 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா நோய்த்தொற்றால் அம்மாநிலத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் கொரோனாவுடன் வாழ மக்கள் தயாராக வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் டெல்லியில் உள்ள 11 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மட்டுமே சிவப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும், ஒட்டுமொத்த மாவட்டத்தையும் அறிவிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பே இல்லை என்ற நிலை தற்போது வருவது சாத்தியமில்லாதது. ஏனெனில், நாடு முழுவதும் அப்படி ஒரு நிலை இல்லை. கொரோனா வைரசுடன் வாழ தயாராக வேண்டும். டெல்லி முழுவதையும் சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக சந்தைகள், மால்களை திறக்க முடியாது.
கடைகள் மூடப்பட்டுள்ளதால் வர்த்தகர்கள் மற்றும் தொழிற்சாலைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. வேலை இழந்தவர்கள் நகரத்தை விட்டு வெளியேறுகிறார்கள். இன்னும் பலர் இங்கிருந்து வெளியேற விரும்புகிறார்கள். நீண்ட நாள்களுக்கு டெல்லியால் இந்தப் பிரச்சனையைத் தாங்க முடியாது. பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட அனுமதி கிடையாது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் நாளை முதல் செயல்படும். ஆனால், விமானம், மெட்ரோ, பேருந்து போக்குவரத்து ரத்து நீடிக்கும் என தெரிவித்தார்.