
ஓபிஎஸ்சுடன் இணைந்து பணியாற்ற முடியாது… ஜெ.அண்ணன் மகள் தீபா திட்டவட்டம்..
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அதிமுக வின் அடிமட்டத் தொண்டர்கள் இதனை ஏற்கவில்லை. சசிகலாவிக்கு தமிழகம் முழுவதும தொடர்ந்து பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியல் களத்தில் குதித்துள்ளார்.அவருக்கு பெரும்பாலான தொண்டர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதா பிறந்த நாளான இன்று புதிய கட்சி தொடங்கப்போதாகவும், அதற்கான பெயர், கொடி போன்றவற்றை அறிவிக்கப்போவதாகவும் தீபா தெரிவித்திருந்தார்.
இதனிடையே சசிகலாவிக்கும் ஓபிஎஸ்க்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் முதலமைச்சர் பதவியை இழந்தார். அவர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
சசிகலா, ஓபிஎஸ் இடையே மோதல் உச்சத்தில் இருந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்ம் தீபாவும் சந்தித்துக் கொண்டனர்.ஓபிஎஸ் இல்லத்துக்கு வந்த தீபாவுக்கு ஆரத்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து ஓபிஎஸ்ம், தீபாவும் இணைந்து செயல்படுவார்கள் என பேசப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதா பிறந்த நாளான இன்று காலை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் தீபா புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, இன்று மாலை 5 மணிக்கு தான் தொடங்கப்போகும் புதிய கட்சி, அதன் பெயர்,சின்னம் போன்ற அனைத்து விவரங்களையும் வெளியிடவுள்ளதாக தெரிவித்தார்.
அதே நேரத்தில் ஆர்,கே,நகரில் இன்று ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெறவுள்ள ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள முடியாது என்றும், அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.