டிச-29- ல் அ.தி.மு.க. பொதுக்குழு -மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

Asianet News Tamil  
Published : Dec 23, 2016, 08:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
டிச-29- ல் அ.தி.மு.க. பொதுக்குழு -மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

சுருக்கம்

டிசம்பர் 29-ந் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்படும் என சென்னையில் நேற்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமாக பதவி வகித்து வந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மறைந்தார். இதையடுத்து தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார்.  

அதிமுக பொதுச் செயலாளராக யார் பொறுப்பேற்பார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.சசிகலா பொறுப்பேற்க முயற்சிகள் நடந்து வருகிறது.

அவரை அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், வி.ஐ.பி.கள், ஊடக அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், துணைவேந்தர்கள் என பெரும்பாலானோர்  சந்தித்து வருகின்றனர்.

 சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்க   கட்சியினர்,  பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.  ஆனால் சாதாரண தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   சசிகலா பொதுச்செயலாளராக கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நகரங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகிறது, கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில்  ராயப்பேட்டையில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை   அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.

 இதில் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர் ராஜு, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் , கே.சி.வீரமணி, காமராஜ், ராஜேந்திர பாலாஜி, ஓ.எஸ். மணியன், அன்பழகன் ஆகியோர் உள்ளிட்ட 50 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

ஜெயலலிதா மறைவையடுத்து நடைபெறும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பதால் இக்கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.இந்த கூட்டத்தில் புதிதாக பெரிய அளவில் முடிவு எதுவும் எடுக்கவில்லை. 

 அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 29-ந் தேதி சென்னையில் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது..

வானகரம் ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட உள்ளது. பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னர் செயற்குழு கூட்டமும் , தொடர்ந்து பொதுக்குழு கூட்டமும் நடக்கும் .

கூட்டத்தில் பங்கேற்க 280 செயற்குழு உறுப்பினர்கள், 2,770 பொதுக் குழு உறுப்பினர்களுக்கான அழைப்பு கடிதம் அனுப்ப பட்டுள்ளது, சில கடிதங்கள் மாவட்ட செயலாளர்கள் வசம் கொடுக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிமுக பொதுச் செயலாளர் இல்லாததால் சிறப்பு அழைப்பாளர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. இந்த பொதுக்குழுவில் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலராக தேர்வு செய்யப்படக் கூடும் என தெரிகிறது.
 

PREV
click me!

Recommended Stories

Udhayanidhi vs CM Vijay: சனாதனத்தை மீண்டும் சீண்டிய உதயநிதி.. ஜோதிடருக்கு அரசு பதவி கொடுத்த விஜய்.. மோதல் ஆரம்பம்!
TN Politics: திமுக-அதிமுக கூட்டணி பேச்சு.. பின்னணியில் அவரா? திருமாவளவன் சொன்ன ஷாக் நியூஸ்!