
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஓ.பி.எஸ். முதலமைச்சராக பதவியேற்றார். இதை தொடர்ந்து ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக பொது செயலாளராக பொறுப்பேற்றார்.
இதையொட்டி நேற்று காலை அனைத்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. அப்போது, ஒ.பன்னீர்செல்வம் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைதொடர்ந்து சசிகலாவை, சட்டமன்ற அதிமுக தலைவராக, அனைத்து எம்எல்ஏக்களும் ஏகமனதாக தேர்வு செய்தனர். பின்னர், சசிகலாவே முதலமைச்சராக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன்படி தீர்மானமும் நிறைவேற்றி, அவரை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தனர்.
இதையடுத்து, வரும் 9ம் தேதி சசிகலாவுக்கு, தமிழக கவர்னர் (பொறுப்பு) கவர்னர் வித்யாசாகர், பதவி பிரமாணம் செய்து வைப்பார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதி, தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு ஓட்டுக்கு 3 முதலமைச்சரா என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
“தமிழக மக்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள். பணத்தை பெற்று கொண்டு ஒருவருக்கு வாக்களித்தார்கள். ஆனால், அந்த ஓட்டு மூலம் 3 பேர் முதலமைச்சராக்கி உள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.