திமுகவை பார்த்து தலைமை செயலாளருக்கு பொறாமை..! தயாநிதி மாறன் பகீர் குற்றச்சாட்டு

By karthikeyan VFirst Published May 13, 2020, 9:36 PM IST
Highlights

திமுக சார்பில் மேற்கொள்ளப்படும் நிவாரண பணிகளை பார்த்து தலைமை செயலாளர் சண்முகம் பொறாமைப்படுவதாக திமுக எம்பி தயாநிதி மாறன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். 
 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 9000ஐ கடந்துவிட்டது. இன்று 509 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 9227ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை விட அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுவதால் அதிகமான தொற்று பாதிப்பு கண்டறியப்படுகிறது. பாதிப்பு அதிகரித்தாலும் இறப்பு விகிதம் 1%க்கும் குறைவாக உள்ளதுடன், அதிகமானோர் குணமடைந்துவருகின்றனர்.

தமிழ்நாடு அரசு, கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளை சிறப்பாக மேற்கொண்டுவருகிறது. ஆனாலும் தொடர்ச்சியாக தமிழக அரசின் மீது பிரதான எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றன. 

டெஸ்ட்டிங் கிட் கொள்முதல் செய்வது, பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பது, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவது என அரசு தரப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்துமே, திமுக கொடுக்கும் அழுத்தத்தால் தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து சொல்லிவருவதுடன், திமுக ஏற்கனவே எடுத்துக்கூறிய விஷயங்களைத்தான் அதிமுக அரசு தாமதமாக செய்துவருவதாகவும் சொல்லிவருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

கொரோனா ஏற்படுத்தியிருக்கும் இக்கட்டான சூழலை பயன்படுத்தி திமுகவும் அதன் தலைவர் ஸ்டாலினும் அரசியல் செய்கிறார் என முதல்வர் பழனிசாமியும் அமைச்சர்களும் குற்றம்சாட்டிவருகின்றனர். ஆனாலும், கொரோனாவுக்கு எதிரான போரில் அரசு செயல்படாவிட்டாலும், எதிர்க்கட்சியான திமுக செயல்படவைக்கும் என்றும், அரசை செயல்பட வைப்பதே திமுக தான் என்றும் ஸ்டாலின் மார்தட்டுகிறார்.

இந்நிலையில், தலைமை செயலாளர் சண்முகம், திமுக மேற்கொள்ளும் நிவாரண பணிகளை பார்த்து பொறாமைப்படுவதாக தெரிவித்துள்ளார். அதாவது அரசு இயந்திரத்தைவிட திமுக என்னவோ சிறப்பாக செயல்படுகிறது என்பதை உணர்த்தும் விதமாக இருக்கிறது அந்த ஸ்டேட்மெண்ட்.

அரசு தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், திமுகவின் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ், மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஒரு லட்சம் மனுக்களை தலைமை செயலாளர் சண்முகத்திடம் திமுக எம்பிக்கள் வழங்கினர். திமுக எம்பிக்களான தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் இந்த மனுக்களை தலைமை செயலாளரை சந்தித்து வழங்கினர். 

இந்த மனுக்களை கொடுத்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், இந்த இக்கட்டான சூழலில் திமுக ஆற்றிவரும் நிவாரண பணிகளை பார்த்து தலைமை செயலாளருக்கு பொறாமை என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். (எதிர்க்கட்சியை பார்த்து பொறாமைப்படுவதற்கு அவர் என்ன அரசியல்வாதியா?)

மேலும், நாங்கள் மனு கொடுக்கும்போது, எம்பி-க்களான எங்களை கொஞ்சம் கூட மதிக்காமல், டிவியில் சத்தத்தை அலறவைத்துக்கொண்டு நாங்கள் பேசியதை கவனித்தார். அதுமட்டுமல்லாமல், உங்களை போன்ற ஆட்களுக்கு வேறு வேலையில்லை என்று கொச்சைப்படுத்தினார். அவரது இந்த கூற்றை கேட்டு நாங்கள் அதிர்ந்தே போனோம் என்று தயாநிதி மாறன் குற்றம்சாட்டியிருக்கிறார்.
 

click me!