நரகாசூரனை அழித்த தினம்.. எடப்பாடிக்கு சவால்..?? பொது செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா வெளியிட்ட வாழ்த்து செய்தி

By Ezhilarasan BabuFirst Published Nov 2, 2021, 4:44 PM IST
Highlights

நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாளில் சூழ்ச்சிகளும், தீமைகளும் நம்மை விட்டு விலக, நன்மையும் அன்பும் நாடி வர இன்பமுடன் கொண்டாடுவோம் தீபாவளியை. இந்த இனிய திருநாளில் நாடெங்கும் அன்பு, அமைதி, தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும், 

சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என பயன்படுத்தினால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்துள்ள நிலையில், மீண்டும் அதிமுகவின் பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா தீபாவளி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இது எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை முதலவராக அரியணையில் அமர்த்திய கையோடு சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார் சசிகலா, பின்னர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவில் சசிகலாவுக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர்களுக்கு இனி கட்சியில் இடமில்லை என்றும் அதிரடிகாட்டினார். சசிகலாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி செய்தது துரோகத்திலும் துரோகம் பச்சை துரோகம் என அவர்மீது கடுமையான விமர்சங்கள் இருந்து வருகிறது. 

இதையும் படியுங்கள்: யோகியை எதிர்த்து பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளராக களமிறங்க வேண்டும்.. சல்மான் குர்ஷித் பயங்கர ஐடியா.

இந்நிலையில், சசிகலா சிறையிலிருந்து வெளி வந்தவுடன் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது, அவரோ கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசியலில் இருந்தே விலகி இருப்பதாக  திடீரென அறிவித்தார். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ள நிலையில் கட்சி வீணாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என முழங்கிய சசிகலா, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க போவதாக அறிவித்துள்ளார். அதேபோல் அதிமுக பொன் விழாவி தினத்தில் சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் என பொறிக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்ததுடன், அதிமுக கொடியை ஏற்றி வைத்தார் .சசிகலாவின் இந்த நடவடிக்கை எடப்பாடி பழனிச்சாமியை கொந்தளிப்படைய வைத்துள்ளது. 

பின்னர் அது குறித்து கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொதுச் செயலாளர் என பொறிக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்துவிட்டால் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிவிடுவாரா? அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, முதலில் அவர் அதிமுகவிலேயே இல்லை என கடுமையாக விமர்சித்தார்.அதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக ஆளுநரை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா குறித்து பேசுகையில், மன்னிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை, சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவர் அதிமுகவில் இல்லை, அவர் செய்வதை பேசுவதை எல்லாம் நாங்கள் பொருட்படுத்துவதே இல்லை என கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் தஞ்சாவூரிலிருந்து, திருநெல்வேலி, இராமநாதபுரம் என தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள சசிகலா திட்டமிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்து நீதி மன்றம் எழுப்பிய 7 கேள்வி. அசராமல் பதிலளித்து தெறிக்கவிட்ட ராமதாஸ்.

இந்நிலையில் இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அவர்களை ஏற்றுக்கொள்வதை மக்கள் முடிவு செய்வார்கள், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையிலேயே கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என கூறியுள்ளார். அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை எனக் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கூறி வந்த நிலையில், தற்போது ஓ பன்னீர்செல்வவத்தின் இக்கருத்து நேரெதிராக அமைந்துள்ளது. இதுவரை பன்னீர் செல்வத்தில் இந்த கருத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. இந்நிலையில் மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் என்ற அறிவிப்புடன் சசிகலா தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, 

இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பிரகாசிக்கும் தினமாகவும் கொண்டாடப்படுகின்ற இந்த நன்னாளில், அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பெருந்தொற்றான கொரோனா என்னும் கொடிய நோயை வென்று மனிதகுலம் மீண்டும் புத்துயிர் பெற்று கொண்டாடும் வகையில் இந்த தீபாவளி  திருநாளில் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிவதுடன் தடுப்பூசியை தவறாமல் செலுத்தி கொண்டு கவனமாக சந்தோஷத்துடன் இந்த தீபாவளி ஒளி திருநாளை கொண்டாட அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.இந்தத் திருநாளில் சூழ்ச்சிகளும், தீமைகளும் நம்மை விட்டு விலக, நன்மையும் அன்பும் நாடி வர இன்பமுடன் கொண்டாடுவோம் தீபாவளியை.

இந்த இனிய திருநாளில் நாடெங்கும் அன்பு, அமைதி, தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும், அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே சசிகலா பொதுச்செயலாளர் என பயன்படுத்தக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக தரப்பில் அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அவர் பொதுச்செயலாளர் என பயன்படுத்தி அறிக்கை வெளியிட்டிருப்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே கருதப்படுகிறது. 

click me!