
தமிழகத்தின் ஆட்சி அமைக்க உரிமை ஆளுநரிடம் உரிமை கோரியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தொடர்புடைய சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை வெளியிடும் எனத் தெரியவந்துள்ளது.
ரூ.100 கோடி அபராதம்
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 66 கோடி சொத்து குவித்ததாக கடந்த 1996-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. 18 ஆண்டுகள் இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 2014-ம் ஆண்டு 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
விடுதலை
இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, 4 பேரையும் விடுவித்து தீர்ப்பளித்தார்.
மேல்முறையீடு
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு, திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்,சுப்பிரமணிய சாமி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரனை செய்தது. இறுதிக்கட்ட விசாரணைகள் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே தமிழக்தின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்காக ராஜினாமா செய்து இருந்தார்.
ஆனால், தீர்ப்பு ஒரு வாரத்துக்குள் வந்துவிடும் என்ற தெரிந்தவுடன் அதிமுக கட்சிக்குள் குழப்பம் ஏற்படத்தொடங்கியது. ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தனியாக ஒரு அணி செயல்படத் தொடங்கி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களும் அணி மாறி வருவதால், பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
ஆளுநர் தாமதம்
பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தனக்கு இருக்கிறது என்ற ஆதரவு கடிதத்தையும் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாஅளித்துவிட்டார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை காரணம் காட்டி ஆளுநர் , சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க தாமதம் செய்து வருகிறார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
எதிர்பார்ப்பு
இந்த சூழலில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியிடப்படும் என உச்ச நீதிமன்றத்தின் பணிப்பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீரப்பை நீதிபதிகள்அமித்தவா ராய், பினாகி சந்திரபோஸ் ஆகியோர் அளிக்க உள்ளனர்.