ஊரடங்குமேல ஊரடங்கு.. சிமெண்ட் விலை ஏறிப்போச்சு.. பாதியில் நிற்கும் மாநகராட்சி பணிகள். நீதி மன்றம் உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Jul 27, 2021, 4:21 PM IST
Highlights

இந்த பணிகளை 6 மாதம் அல்லது ஒரு ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசத்தை நீட்டிக்ககோரியும், டெண்டர் ஒப்பந்தங்களை ரத்து செய்யக்கூடாது என சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டது.

கொரனோ ஊரடங்கு காரணமாக தடைபட்ட பணிகளை முடிக்க கூடுதல் அவகாசம் கோரி சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் உறுப்பினர்கள் அளித்த கோரிக்கை மனுவை நான்கு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்ககூடியவர்களுக்கு மாநகராட்சி பணிகளான சாலை அமைத்தல், மழை நீர் வடிகால்கள் அமைத்தல் உள்ளிட்ட  பணிகள்  வழங்கப்பட்டன எனக் கூறப்பட்டுள்ளது. 

இந்த பணிகளை 6 மாதம் அல்லது ஒரு ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசத்தை நீட்டிக்ககோரியும், டெண்டர் ஒப்பந்தங்களை ரத்து செய்யக்கூடாது என சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டது. அந்த மனுவில், கொரனோ பரவல் காரணமாக கடந்த 2020ஆம்  ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டிருந்ததால் கட்டுமான பணியாளர்கள் சொந்த ஊருக்கு சென்றதாலும், ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தபட்டபோது, கட்டுமான பொருட்களின்  விலை கடுமையாக உயர்த்தபட்டிருந்ததாகவும், அதன் பின் தேர்தல் நடத்தைவிதிகள் அமலில் இருந்ததால் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கொரனோவின்  2வது அலையை கட்டுபடுத்த மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கபட்டதால், பணிகள் மேற்கொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. எனவே கூடுதல் கால அவகாசம் வழங்கவேண்டும் என்றும், இந்த டெண்டர்களை ரத்து செய்யக்கூடாது என்றும் சென்னை மாநகராட்சிக்கு கடந்த ஜூன் 22ம் தேதி  மனு அளித்ததாகவும், அந்த மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறபிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கபட்டிருந்தது. இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.இளங்கோவன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி சங்கத்தின் கோரிக்கை மனுவை 4 வாரங்களில்  பரீசீலித்து தகுந்த உத்தரவு பிறபிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
 

click me!