எடப்பாடி ஆட்சிக்கு கடும் நெருக்கடி... தேர்தலுக்கு முன் அடுத்தடுத்து சோதனை..!

By Thiraviaraj RMFirst Published Mar 21, 2019, 11:38 AM IST
Highlights

சூலூர் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக கனகராஜின் மரணம் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

சூலூர் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக கனகராஜின் மரணம் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.  

ஆட்சியை தக்க வைக்க பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம், திருவாரூரில் கருணாநிதி மறைவு ஓசூர் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணா ரெட்டி தண்டனை பெற்றது, திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ போஸ் மரணம் என 21 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில் தற்போது சூலூர் அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மரணம் என மொத்தம் 22 தொகுதிகள் காலியாக உள்ளது. ஏற்கெனவே பெரும்பான்மைக்காக திண்டாடி வரும் அதிமுக அரசு சட்டமன்ற இடைத்தேர்தலில் 8 இடங்களில் அவசியம் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்நிலையில் கனகராஜ் மரணத்தால் 9 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவையில் தற்போதைய நிலவரப்படி பெரும்பான்மையை நிரூபிக்க 110 உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி அரசுக்கு தேவை. ஆளும் அதிமுகவுக்கு ஆதரவாக, சபாநாயகர் நீங்கலாக, 109 எம்எல்ஏக்கள் இருந்தனர். அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆதரவாளர்களாக இருப்பதால், அவர்களையும் டி.டி.வி.தினகரனையும் சேர்த்தால், அந்த அணியில் 4 பேர் மட்டுமே உள்ளனர்.
 
திமுகவில் 88 உறுப்பினர்களும், காங்கிரஸ் 8 எம்எல்ஏக்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் ஒரு உறுப்பினர் என திமுக கூட்டணியில் மொத்தம் 97 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே, பெரும்பான்மைக்குத் தேவையான 108 எம்.எல்.ஏக்கள் மற்றும் சபாநாயகரின் ஆதரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இருந்தது. இப்போது கனகராஜ் மரணமடைந்ததால் 109 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் தங்கள் நிலைப்பாடு குறித்து தெளிவாக அறிவிக்கவில்லை. 

ஆகையால் இதுவரை ஆபத்து இல்லாமல் தப்பி வந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆளும் அதிமுக அரசுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு ஆபத்தாக வந்துள்ளது. 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இப்போது இல்லை. சூலூர் தொகுதியும் காலியாக உள்ளது என்பதால் மீதமுள்ள 18 தொகுதிகளுக்கும் ரிசல்ட் வந்தால் உறுப்பினர்களின் எண்ணிக்கை 230 ஆக இருக்கும். ஆக ஆட்சியமைக்க எடப்பாடி அரசுக்கு 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இப்போது உள்ள 107 உறுப்பினர்களைத் தவிர தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோரை விடுத்து 9 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும்.

 ஆகையால் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இடைத்தேர்தலை சமாளித்து ஆட்சியை தக்கவைப்பாரா என பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். மக்களவை தேர்தலில் வாஷ் அவுட் ஆனாலும் இடைத்தேர்தலில் 9 தொகுதிகளை வென்றால்மட்டுமே எடப்பாடி ஆட்சி நீடிக்கும். 

click me!