நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 7 மாநிலங்களின் முதல்வருடன் பிரதமர் மோடி 23ம் தேதி ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 7 மாநிலங்களின் முதல்வருடன் பிரதமர் மோடி 23ம் தேதி ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 7-ம் கட்டமாக ஆகஸ்ட் 31-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது. அவ்வப்போது கொரோனா வைரஸ் சூழல் பரவல் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.இருப்பினும் பொருளாதார சூழல் கருதி இதுவரை ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்திவிட்டது. ரயில், விமானப் போக்குவரத்து, திரையரங்குகள், விளையாட்டு அரங்குகள், பள்ளி, கல்லூரிகள் போன்றவை மட்டுமே முழுமையாக இயங்க அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 19 லட்சம் பேர் புதிதாக நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தொற்று அதிகமுள்ள 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும் 23ம் தேதி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது. இதுவரை இந்தியாவில் 54,00,620 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 86,752ஆக அதிகரித்துள்ளது.