தமிழகத்தில் இன்று கோவேக்ஸின் தடுப்பூசி பரிசோதனை... எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் பணிகள் தீவிரம்!

By Asianet TamilFirst Published Jul 23, 2020, 8:15 AM IST
Highlights

தமிழகத்தில் கோவேக்ஸின் தடுப்பூசி பரிசோதனைகள் சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் இன்று நடைபெறுகிறது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றை ஒழிக்க உலக நாடுகள் பலவும் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவிலும் அதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், ஐ.சி.எம்.ஆருடன் இணைந்து ‘கோவேக்ஸின்’ என்ற தடுப்பூசியைக் கண்டுபிடித்தது. அடுத்தடுத்து சோதனை கட்டங்களைத் தாண்டிய அந்த மருந்து, தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் கட்டத்தில் உள்ளது.
கோவேக்ஸின் தடுப்பூசி ஹரியானா, டெல்லி ஆகிய மருத்துவமனைகளில் மனிதர்களுக்கு செலுத்தும் பணிகள் தொடங்கின. இதுவரை 327 பேருக்கு கோவேக்ஸின் மருந்து செலுத்தப்பட்டுள்ளது. ஊசி செலுத்தியவர்களை மருத்துவர்களும் மருந்து ஆராய்ச்சியாளர்களும் தீவிரமாகக் கண்காணித்துவருகிறார்கள். இந்நிலையில் ஹரியானா, டெல்லியைத் தொடர்ந்து பீஹார், ஒடிஷா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்தப் பரிசோதனையை நடத்த மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன.


தமிழகத்திலும் கோவேக்ஸின் மருந்தை மனிதர்களுக்கு பரிசோதனை  செய்ய சென்னையை அடுத்த காட்டங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் மருந்து செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது. இந்தப் பரிசோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஊசி மருந்து செலுத்தப்பட உள்ளது. ஊசி மருந்து செலுத்திய பிறகு, அந்த மருந்து மனிதர்களின் உடலில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை மருத்துவர்களும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும். பரிசோதனை முடிவுகளை விரைந்து அனுப்பும்படி ஐ.சி.எம்.ஆர். கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!