இந்த மாத இறுதியில் கொரோனா உச்சநிலை அடையும்.. மருத்துவ வல்லுநர் கூட்டத்தில் பதறிய ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published May 22, 2021, 1:27 PM IST
Highlights

இச்சூழலில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இந்த மாத  இறுதியிலோ ஜூன் மாத தொடக்கத்திலோ உச்ச நிலையை எட்டும் என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன, 

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துதல் குறித்தும் முழு ஊரடங்கை அமல் படுத்துவது குறித்து மருத்துவ வல்லுநர் குழுவினருடன் நடைபெற்ற கலந்து ஆலோசனை கூட்டத்தில் ஆற்றிய உரை பின்வருமாறு: 

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கக்கூடிய இக்கட்டான சூழலில் இந்த அரசு பொறுப்பேற்று, கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், மக்களின் உயிர்களை காப்பாற்ற தேவையான அனைத்து முயற்சிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. சென்ற கூட்டத்தில் இந்தத் தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அவசியம் குறித்து நீங்கள் அனைவரும் வலியுறுத்தினீர்கள். 

அனைவரின் கருத்துக்களின் அடிப்படையில் 14-5-2021 முதல் குறிப்பிட்ட சில தளர்வுகளை மட்டும் அனுமதித்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கும் மட்டுமல்லாது நாள்தோறும் 1.6 லட்சம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள், ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்துதல், கூடுதல் மருத்துவர்களையும், செவிலியர்களையும் நியமித்தல் போன்ற பல்வேறு பணிகளை கடந்த இரண்டு வாரங்களில் செயல்படுத்தி உள்ளோம். மேற்கூறிய நடவடிக்கைகளால் கொரோனா நோய் தொற்று பரவும் வேகம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு தற்போது நாள்தோறும் 35 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது. தமிழ்நாட்டை விட மக்கள்தொகை குறைவாக உள்ள சில அண்டை மாநிலங்களில் தொற்று உச்சத்தின்போது 50 ஆயிரத்திற்கும் மேலானோர் நாள்தோறும் பாதிக்கப்பட்டனர்.

இச்சூழலில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இந்த மாத  இறுதியிலோ ஜூன் மாத தொடக்கத்திலோ உச்ச நிலையை எட்டும் என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன, எனவே தொற்று மேலும் வேகமாக பரவாமல் இருக்கவும், இறப்புகளை குறைக்கவும், தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நாம் உடனடியாக முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. நான் கூறிய கருத்துக்களை மனதில் கொண்டு, மருத்துவ நிபுணர்கள் அனைவரும் தமது மேலான கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்களுடைய கருத்துகளின் அடிப்படையிலும் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவின் கருத்துக்களின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு முடிவு செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

 

click me!