விஞ்ஞான ரீதியில் நடவடிக்கை எடுத்ததால் மதுரையில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. நிதி அமைச்சர் PTR தியாகராஜன் அதிரடி

By Ezhilarasan BabuFirst Published Jun 2, 2021, 10:15 AM IST
Highlights

கூடுதல் மருத்துவர்கள் 3500 ற்கும் மேற்பட்ட கூடுதல் முன்கள பணியாளர்களை நியமனம் செய்து வீடுகள் தோறும் தேடி சென்று பரிசோதனைகள் மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஒருங்கிணைந்த பகிர்ந்து அளிக்கப்பட்ட செயல்பாடுகளால் மதுரை மாவட்டத்தில்  கொரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக உள்ளது என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஜி எஸ் டி  கவுன்சில் கூட்டம் மற்றும் நிதி நிலை குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த ஒரு வார காலம் சென்னையில் இருந்தேன். அப்போது மதுரையில் அமைச்சர் மூர்த்தி தொடர் கண்காணிப்பில் மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு இருந்தார். நாங்கள் ஆட்சி பொறுப்பேற்று மூன்று வாரங்கள் ஆகிறது. எங்கள் தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின் அவர்கள் தெளிவான ஒரு கட்டளையையிட்டு கொரோனா கட்டுப்பாட்டில் அனைவரும் கவனம் செலுத்தும் படி அறிவுறுத்தினார். 

அதன் அடிப்படையில் பதவி ஏற்பு முடிந்து மதுரைக்கு வந்த முதல் நாளில் இருந்து நானும் அமைச்சர் மூர்த்தியும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். அன்றே சித்த மருத்துவ வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தோம். இன்றைக்கு மதுரையில் மூன்று வாரத்திற்கு முன்னர் இருந்த சூழல் மிகவும் சிறப்பாக மாறி முன்னேற்றம் அடைந்துள்ளது. ஒரு காலத்தில் படுக்கை வசதிகள் இல்லை, ஐ சி யு படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என எல்லாவகையிலும் பிரச்னை இருந்தது. கண்காணிப்பு அலுவலர் சந்திர மோகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ஆகிய இரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மருத்துவர்கள். மதுரையை நன்கு அறிந்தவர்கள், அதே போல் மாநகராட்சி ஆணையர் விசாகன் அமைச்சர் மூர்த்தி மற்றும் என்னுடைய அறிவுரைகளை ஏற்று விஞ்ஞான முறையில் நடவடிக்கை எடுத்ததால் குறுகிய காலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

இன்றைக்கு இருக்க கூடிய சூழ்நிலையில் படுக்கை வசதி ,ஆக்சிஜன் வசதி ,அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குறைகள் இல்லாத நிலையை உருவாக்கி இருக்கிறோம். மத்திய அரசின் உத்தரவில்லாமல் கொண்டு வர இயலாத கருப்பு பூஞ்சைக்கான மருந்து மற்றும் தடுப்பூசி மட்டும் தேவையான அளவு இல்லையே தவிர மற்ற அனைத்து வகையிலும் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையே இதற்கு காரணம். தகவல்களை திரட்டி செயல்பட்டதோடு மட்டுமல்லாமல் ,வெளி மாநிலங்களில் இருந்து ஆக்ஜிசன் கொண்டு வருவதற்கு துரித நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. திட்டமிட்டு படுக்கை எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. இது மட்டுமல்லாமல் ஒரு நிபுணர் குழுவை உருவாக்கி அவர்களின் அறிவுரைகள் கேட்டு படிப்படியாக பணிகள் மேற்கொண்டோம். மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் கட்டளை அறை ஏற்படுத்தப்பட்டு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை தாண்டி கிராமங்கள் உள்ளிட்ட  புறநகர் பகுதிகளில் உள்ளிட்ட பணிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டு ஆங்காங்கு நடைபெற்ற செயல்பாடுகளால் மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைத்திட வழி வகை செய்யப்பட்டது.

கூடுதல் மருத்துவர்கள் 3500 ற்கும் மேற்பட்ட கூடுதல் முன்கள பணியாளர்களை நியமனம் செய்து வீடுகள் தோறும் தேடி சென்று பரிசோதனைகள் மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாங்கள் அளித்த வாக்குறுதியை முதல்வரின் வழிகாட்டுதலில் காப்பாற்ற முடிந்துள்ளது. 13 ஆம் தேதி இருந்த நிலையை மாற்றி புது புது இடங்களில் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி,தோப்பூரில் மட்டும் 400 ஆக்சிஜன் படுக்கைகளை உருவாக்கினோம்.அரசு, அமைச்சர்கள், ஆட்சியர் உள்ளிட அனைவரும் ஒருங்கிணைந்து இந்த நிலையை எட்டி உள்ளோம். தற்போதும் இந்த முழு ஊரடங்கை பொதுமக்கள் முறையாக பின்பற்றினால் இன்னும் சீக்கிரமாகவே இரண்டாவது அலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

 

click me!