ராஜஸ்தான், சத்தீஷ்கரில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்… தெலங்கானாவில் டிஆர்எஸ்!! மத்திய பிரதேசத்தில் இழுபறி… ஷாக் ரிப்போர்ட் !!

By Selvanayagam PFirst Published Dec 8, 2018, 6:41 AM IST
Highlights

ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலுக்கு பிந்திய கருத்துக் கணிப்பில் பல ஷாக் தரும் முடிவுகள் வெளிவந்துள்ளன.  அதன்படி ராஜஸ்தான் மற்றும் சத்கீஷ்கரில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளளும் என்றும் தெரிகிறது. மத்திய பிரதேசத்தில் இழுபறி நீடிக்கும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

 

அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தேர்தலுக்கு முன்னோட்டமாக மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் அமைந்தன.

ஏற்கனவே மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் மாநிலங்களில் வாக்குப் பதிவு முடிந்த நிலையில், எஞ்சிய தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங் களில் நேற்று ஓட்டுப்பதிவு முடிந்தது. இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

தற்போது பாஜக  ஆட்சி நடக்கிற ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என தெரிய வந்துள்ளது. அதே போன்று பாஜக ஆட்சி  நடைபெறுகிற மத்திய பிரதேசத்தில்  அந்தக் கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே இழுபறி ஏற்படலாம்.

தெலுங்கானாவை பொறுத்தமட்டில், சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியை தக்க வைக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் 199 இடங்களில் 100 இடங்களை பெற்றால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம். இங்கு இந்தியா டுடே-ஆக்சிஸ் கருத்துக்கணிப்பு காங்கிரசுக்கு 119-141 இடங்களும், பாஜகவுக்கு  55-72 இடங்களும் கிடைக்கலாம் என கூறுகிறது.

டைம்ஸ் நவ், சி.என்.எக்ஸ். கருத்துக்கணிப்பு காங்கிரசுக்கு 105 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 85 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கிறது.

ஆனால் ரிபப்ளிக் டி.வி., ஜன்கி பாத் கருத்துக்கணிப்போ, காங்கிரசுக்கு 81-101 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 83-103 இடங்களும் கிடைக்கலாம் என்கிறது.



மத்திய பிரதேசம்

மத்திய பிரதேச மாநிலத்தில் 230 இடங் களில் 116 இடங்களில் வெற்றி பெற்றால் தனிப்பெரும்பான்மை பெற முடியும். இங்கு ரிபப்ளிக் டி.வி., ஜன்கி பாத் கருத்துக்கணிப்பு பாஜகவிக்கு  108-128 இடங்களும். காங்கிரசுக்கு 95-115 இடங்களும் கிடைக்கலாம் என கூறுகிறது.

இந்தியா டுடே, ஆக்சிஸ் கருத்துக்கணிப்பு, பாரதீய ஜனதாவுக்கு 102-120 இடங்களும், காங்கிரசுக்கு 104-122 இடங்களும் கிடைக்கலாம் என்கிறது.

ஆனால் டைம்ஸ் நவ், சி.என்.எக்ஸ். கருத்துக்கணிப்பு, 126 இடங்களுடன் பாரதீய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும், காங்கிரசுக்கு 89 இடங்கள் கிடைக்கும் என கூறுகிறது.

ஏ.எஸ்.பி. நியூஸ் கருத்துக்கணிப்பு, காங்கிரஸ் கட்சி 126 இடங்களுடன் ஆட்சியைப் பிடிக்கும் என கூறுகிறது. இந்தக் கருத்துக்கணிப்பு பாஜகவுங்ககு  94 இடங்கள் கிடைக்கும் என சொல்கிறது.



சத்தீஷ்கர்

90 இடங்களை கொண்ட சத்தீஷ்கரில் 46 இடங்களில் வென்றால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம். அங்கு ரிபப்ளிக் டி.வி., சி ஓட்டர் கருத்துக்கணிப்பு  பாஜகவுக்கு  35-43 இடங்களும், காங்கிரசுக்கு 44-50 இடங்களும் கிடைக்கும் என்று கூறுகிறது.

நியூஸ் நேஷன், பாஜகவுக்கு  38-42 இடங்களும், காங்கிரசுக்கு 40-44 இடங்களும் கிடைக்கும் என கணித்துள்ளது. டைம்ஸ் நவ், சி.என்.எக்ஸ். கருத்துக்கணிப்பு, 46 இடங்களுடன் பாஜக  தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்கிறது. காங்கிரசுக்கு 35 இடங்கள் கிடைக்கலாம் என கூறுகிறது.

ஏ.பி.பி. நியூஸ், பாரதீய ஜனதாவுக்கு 52 இடங்களும், காங்கிரசுக்கு 35 இடங்களும் கிடைக்கும் என கணித்துள்ளது.

தெலுங்கானா

119 இடங்களை கொண்ட தெலுங்கானாவில் 60 இடங்களைப்பிடித்தால் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம். அங்கு பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சிக்கு ஆதரவாக அமைந்துள்ளன.

ஆனால் சில கருத்துக்கணிப்புகள் டி.ஆர்.எஸ்.சுக்கும், காங்கிரஸ்-தெலுங்குதேசம் கூட்டணி இடையே இழுபறி ஏற்படலாம் எனவும் தெரிவிக்கின்றன.

மிசோரம்

மிசோரத்தைப் பொறுத்தவரை ஆளும் மிசோரம்தேசிய முன்னணிக்கே மீண்டும் வாய்ப்பிருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இறுதி முடிவுகள் எப்படி அமையும் என்று அறிய வரும் 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை காத்திருக்க வேண்டும்.

click me!