ஜான் ஏற முழம் வழுக்கும் சசிகலாவின் நிலைமை... பாஜகவே இறங்கி வந்தும் ரிலீசாவதில் திடீர் ட்விஸ்ட்..!

By Thiraviaraj RMFirst Published Oct 15, 2019, 5:59 PM IST
Highlights

 சசிகலா மற்றும் இளவரசி அளவுக்கு மீறி சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு துஷ்பிரயோகம் செய்தவர்கள். ஆகையால் இவர்களை நன்னடத்தை அடிப்படையில் வெளியே விடக்கூடாது. 

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, இளவரசி ஆகியோரை முன்கூட்டியே விடுதலை செய்ய கூடாது என காங்கிரஸ் கட்சி சார்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு செயலாளர் முத்து மாணிக்கம், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை நேரில் சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தார். அதில், சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகளை அனுபவித்து இருக்கிறார்கள்.

இதுகுறித்து ஆதாரங்களை அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்த படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை சாட்சியாக வைத்து சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா கர்நாடக அரசிற்கு 2 கடிதங்கள் அனுப்பினார். அதில் சிறைத்துறை கண்காணிப்பாளர் அறை அருகில் 5 அறைகள் சசிகலா மற்றும் இளவரசிக்கு ஒதுக்கப்பட்டது. இதில் யோகா பயிற்சி அறை, படிப்பகம், தூங்குவதற்கு சொகுசு கட்டில்கள், ஏசி வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து கர்நாடக அரசு சிறையில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் குழு அமைத்தது. அவர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் சிறைக்கைதிகளை சந்தித்து விசாரணை நடத்தினார். அதில் பல்வேறு தகவல்கள் கிடைத்தது.

அவற்றை 260 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக தயார் செய்து வினய்குமார், சமீபத்தில் அதை மாநில தலைமை செயலாளரிடம் சமர்ப்பித்தார். அதில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு வி.ஐ.பி. சலுகை உட்பட பல்வேறு வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டு இருப்பது உண்மைதான் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சிறையில் இருந்து வெளியே சென்று வந்த காட்சிகள், இவர்களுக்கான ஒதுக்கப்பட்டுள்ள அறைகள், சசிகலாவை யார் யார் வந்து சந்தித்திருந்தார்கள் போன்ற பல்வேறு தகவல்கள் அடங்கிய அறிக்கை மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது.

இந்தநிலையில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரை சிறையின் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய கர்நாடக அரசுக்கு சிறைத்துறை நிர்வாகம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சசிகலா மற்றும் இளவரசி அளவுக்கு மீறி சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு துஷ்பிரயோகம் செய்தவர்கள். ஆகையால் இவர்களை நன்னடத்தை அடிப்படையில் வெளியே விடக்கூடாது. சம்மந்தப்பட்ட சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ், சிறைத்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் துணை கண்காணிப்பாளர் அனிதா ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

click me!