உடைகிறது காங்கிரஸ் -திமுக கூட்டணி... உள்ளாட்சி தேர்தலில் தனித்துப்போட்டி..!

By Thiraviaraj RMFirst Published Jun 22, 2019, 12:29 PM IST
Highlights

காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளை கழற்றி விட்டு உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்து நிற்க வேண்டும் என ஸ்டாலினுக்கு கட்சி நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளை கழற்றி விட்டு உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்து நிற்க வேண்டும் என ஸ்டாலினுக்கு கட்சி நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அப்போதே ஒன்றுமில்லாத காங்கிரஸ் கட்சிக்கு இத்தனை தொகுதிகளை ஸ்டாலின் ஒதுக்கி இருக்கக்கூடாது என திமுகவுக்குள் சலசலப்பு எழுந்தது. ஆனாலும், காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்த்ததாலும் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதாலும் காங்கிரஸ் கேட்ட தொகுதிகளை கொடுத்து விட்டார் மு.க.ஸ்டாலின்.

தமிகழத்தில் தேனி தொகுதியை தவிர அத்தனை தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனாலும், மத்தியில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து எதிர் கட்சி அந்தஸ்தை இழந்தது. இந்திய அளவில் படு தோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வெற்றி பெற மு.க.ஸ்டாலினின் பிரச்சாரமும், அதிமுக -பாஜக எதிர்ப்பும் காரணமாக இருந்ததால் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் இங்கு வெற்றி பெற்றுள்ளனர் என பெருமை பட்டுக்கொண்டனர் திமுகவினர். 

ஆனால், அந்த பெருமையை சிறுமை படுத்தும் விதமாக திருச்சி தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசு, ‘’ திருச்சியில் எனக்கு 4.5 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. இதில் 2 லட்சம் வாக்குகள் கூட்டணி கட்சிகள் மூலம் கிடைத்தவை. மீதமுள்ள 2.5 லட்சம் வாக்குகள் எனது தனிப்பட்ட செல்வாக்குக்கு கிடைத்த வாக்குகள்’’ எனக் கூறினார். இது திருச்சி திமுகவினரையும் , திமுக தலைமையையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.  

காங்கிரஸ் கட்சி தலைவர்களை அழைத்த மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் இப்படி பேசலாமா? எங்கள் கட்சியுனர் பிரச்சாரம் செய்து உழைத்து வெற்றி பெற வைத்தால் அவர், தனக்காக விழுந்த ஓட்டுகள் என பெருமை பேசித் திரிகிறார்’ என கொந்தளித்து இருக்கிறார்.

இந்நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கே.எஸ்.அழகிரி, ’’மாவட்ட தலைவர்கள் பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு மூன்று தேர்வுகள் வைக்கப்படும். அதில் வெற்றி பெற்றால் மட்டுமே பதவியில் நீடிக்க முடியும். உள்ளாட்சி தேர்தலில் நாம் அதிக இடங்களில் போட்டியிட்ட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இதுவும் திமுகவினரை ஆத்திரப்பட வைத்துள்ளது. இதனால் அதிருப்தியான திமுக எம்.எல்.ஏ கே,என்.நேரு, ‘உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும். காங்கிரஸுக்கு எவ்வளவு நாளுக்கு திமுக பல்லாக்கு தூக்குவது.? காங்கிரஸ் கட்சியினர் ஆளாளுக்கு பேசுவார்கள் அதையெல்லாம் கேட்டுக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? என ஒரு விழாவில் பொங்கி எழுந்து விட்டார். 

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இல்லாத நிலையில் மொத்தமாக தமிழகத்தில் வெற்றிபெற்றும் திமுகவுக்கு எந்தப்பலனும் இல்லாமல் போய் விட்டது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் மேலும் அதிகமாக சீட் கேட்க காங்கிரஸ் தயாராகி வருகிறது. இது திமுக நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை. தனியாக களமிறங்கி வெற்றி பெறலாம் என தலைமையிடம் நச்சரித்து வருகிறார்கள். ஆக மொத்தத்தில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு கல்தா கொடுக்கத் தயாராகி விட்டது. ‘’காங்கிரஸுக்கு திமுக எத்தனை நாட்களுக்குத் தான் பல்லக்கு தூக்குவது’’ என கே.என்.நேரு சொன்ன ஒரு வார்த்தையில் அத்தனை உஷ்ணம் அடங்கியிருப்பதை கவனிக்க வேண்டும்.    
 

click me!