பாஜகவின் வேல் யாத்திரைக்குப் போட்டியாக ஏர் கலப்பை பேரணி... காங்கிரஸ் கட்சி அதிரடி முடிவு..!

By Asianet TamilFirst Published Nov 18, 2020, 9:52 PM IST
Highlights

தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரை நடத்திவரும் நிலையில், ஊர் ஊராக காங்கிரஸ் சார்பில் ஏர் கலப்பை பேரணி நடைபெற உள்ளது.
 

இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காகக் கூட்டுவோம், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குவோம் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி, கடந்த 6 ஆண்டுகளாகக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, விவசாயிகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிற வகையில் மூன்று வேளாண் சட்டங்களை பா.ஜ.க. அரசு நிறைவேற்றியிருக்கிறது.


விவசாயிகளோ, விவசாயச் சங்கங்களோ எந்த கோரிக்கையையும் முன்வைக்காத நிலையில், வேளாண் சட்டங்களை அவசர அவசரமாக மோடி அரசு நிறைவேற்றியிருக்கிறது. இதன்மூலம் விவசாயிகள் பெற்று வந்த குறைந்தபட்ச ஆதரவு விலையும் பறிக்கப்பட்டிருக்கிறது. விளைபொருட்களை விற்று வந்த விற்பனைக் கூடங்கள் ஒழிக்கப்பட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்க சந்தைக்கு பா.ஜ.க. அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதன்மூலம் விவசாயிகளின் விளை பொருட்களுக்கான விலையை கார்ப்பரேட் நிறுவனங்களே முடிவு செய்கிற அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.
பா.ஜ.க. அரசின் விவசாய விரோதச் சட்டங்களை எதிர்த்து தலைவர் ராகுல்காந்தி வழிகாட்டுதலின்படி, பலகட்ட போராட்டங்களைத் தமிழக காங்கிரஸ் நடத்தி வருகிறது. தமிழகத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி முதல்கட்டமாக போராட்டம் நடத்தியது. அதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 11ம் தேதி திருவண்ணாமலையில் விவசாய விரோதச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம் என்ற மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தினோம். இதன்மூலம் தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்தினோம். மேலும், மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மூலம் விவசாய விரோதச் சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டு நிறைவு பெற்றிருக்கிறது. இந்த கையெழுத்து படிவங்களை குடியரசுத் தலைவரிடம் விரைவில் ஒப்படைக்க இருக்கிறோம்.
விவசாய விரோதச் சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெறுகிற வரை தொடர்ந்து போராடுவதென தமிழ்நாடு காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. வருகிற நவம்பர் 22ம் தேதி கோயம்புத்தூர், கருமத்தம்பட்டி, சோமனூர் மெயின் ரோட்டில் மாபெரும் விவசாயிகள் எழுச்சி மாநாடு மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. மாலை 5.30 மணியளவில் நிறைவாக ஏர் கலப்பை பேரணியை நடத்துவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள், முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற இன்னாள் - முன்னாள் உறுப்பினர்கள், காங்கிரஸ் முன்னோடிகளுடன் நானும் பங்கேற்க இருக்கிறேன்.
இதையொட்டி நவம்பர் 28ம் தேதி மாவட்டக் காங்கிரஸ் கமிட்டிகள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ஏதாவது ஒரு சட்டமன்றத் தொகுதியில் ஏர் கலப்பைப் பேரணி நடைபெற இருக்கிறது. கள்ளக்குறிச்சியில் நடைபெறும் ஏர் கலப்பைப் பேரணியில் நான் பங்கேற்க இருக்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு சேலத்திலும், ஈ.வெ.கி.ச. இளங்கோவன் ஈரோட்டிலும், சு. திருநாவுக்கரசர் திருச்சியிலும் பங்கேற்க இருக்கிறார்கள்.” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 
 

click me!