50 சீட் கேட்கும் காங்கிரஸ்... அம்போவென தவிக்கும் திமுக... கூட்டணி மாறுகிறதா..?

By Thiraviaraj RMFirst Published Aug 21, 2020, 8:02 PM IST
Highlights

திமுக அதற்கு சம்மதிக்காத பட்சத்தில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கவும், பலத்தை உயர்த்தவும், தமிழகத்தில் மூன்றாவது கூட்டணியை உருவாக்கும் எண்ணத்தில் இருப்பதாகவும் கதர் கட்சியினர் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறுகிறார்கள். 
 

பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் திமுக கூட்டணிக் கட்சிகளின் பலம் என்ன என்ற ஆய்விலும் இறங்கியது. திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட் கொடுக்கலாம் என்பதைப் பற்றிய ஆய்வின் அடிப்படையாக இதுவும் இடம்பெற்றுள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 4.37 சதவிகித வாக்குகளே பெற்றது. 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 6.4 சதவிகித வாக்குகள் பெற்றது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸின் வாக்கு சதவிகிதம் 12.76 ஆக இருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் ஐபேக் நடத்திய ஆய்வில், காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவிகிதம் 8% ஆக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் ஐபேக் ரிப்போர்ட்டாக தெரிவித்துள்ளது. எனவே 8% வாக்குகளை காங்கிரஸ் வைத்துள்ள நிலையில், அதற்கேற்ப தனது அரசியல் நிலைப்பாடுகளை அமைப்பது பற்றிய ஆலோசனைகள் திமுக தலைமையில் தீவிரமாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி 50 சீட்டுக்கள் திமுகவிடம் கேட்க இருக்கிறது காங்கிரஸ்.

காய்ந்து போன காங்கிரஸ் வாக்கு சதவிகிதம் இப்படி திடீரென உயர்ந்ததற்கு காரணம் என்ன? தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியா முழுவதும் காங்கிரஸின் செல்வாக்கு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. சிறுபான்மை மக்களான கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் காங்கிரஸை நம்ப ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக தமிகத்தில் திமுகவை நம்பிய சிறுபான்மையினர் அக்கட்சியின் இரட்டை வேடத்தை புரிந்து கொண்டு, காங்கிரஸ் ஆதரவாளர்களாக மாற ஆரம்பித்துள்ளனர். சிறுபான்மை மக்களிடம் இருந்த நம்பிக்கையை திமுக மெல்ல இழந்து வருகிறது. 

இதனை உணர்ந்து கொண்ட தமிழக காங்கிரஸ் திமுகவிடம்  வரும் சட்டமன்ற தேர்தலில் 50 சீட்டுக்களுக்கும் குறையாமல் கேட்க இருப்பதாக அகட்சியினர் கூறுகின்றனர். திமுக அதற்கு சம்மதிக்காத பட்சத்தில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கவும், பலத்தை உயர்த்தவும், தமிழகத்தில் மூன்றாவது கூட்டணியை உருவாக்கும் எண்ணத்தில் இருப்பதாகவும் கதர் கட்சியினர் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறுகிறார்கள். 
 

click me!