ஹெச்.ராஜா மீது நீங்களும் புகார் கொடுங்க... நடிகர் சிவகார்த்திகேயனை உதவிக்கு அழைக்கும் மனிதநேய மக்கள் கட்சி!

By manimegalai aFirst Published May 24, 2021, 10:51 PM IST
Highlights

நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார் என்று மனிதநேய மக்கள் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
 

பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா அண்மையில் பேட்டியளித்தபோது, “ஜெயிலர் ஜெயப்பிரகாஷைக் கொன்ற அல்-உம்மாவோட ஆளு இன்னைக்கு பாபநாசத்தோட எம்எல்ஏ” என்று கூறியிருந்தார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மீதான இந்தக் குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுதொடர்பாக மனித நேயமக்கள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் ஹெச்.ராஜாவுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரை அளித்துவிட்டு பேசிய அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அப்ரார், “நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை ஜெயிலர் தாஸ் மாரடைப்பு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். ஆனால், வேண்டுமென்றே ஹெச்.ராஜா சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லாவின் பெயரை கெடுக்கும் நோக்கில் பொய்யான கருத்துகளை பரப்பி வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
ஹெச். ராஜா எப்போதுமே அவதூறு கருத்துகளை பரப்புவதையும் மன்னிப்பு கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால், இந்த முறை மன்னிப்பு கோரினாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம். எங்களைப் போலவே நடிகர் சிவகார்த்திகேயனும் தலையிட்டு ஹெச். ராஜா மீது புகார் அளிக்க வேண்டும்” என்று அப்ரார் தெரிவித்தார். 

click me!